அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தை கைச்சாத்திடுமாறு சீன ஜனாதிபதி தனக்கு அழுத்தம் பிரயோகித்தார் எனவும் சட்டவிரோதமான முறையிலேயே சீனாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது என்றும் முன்னாள் ஜனாதிபதி எனக்கு கடிதம் தந்தால் உடனே துறைமுக ஒப்பந்தத்தை கைவிடுவோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் திட்டவட்டமாக அறிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த மாதம் சீனாவிற்கு சென்று என்ன பேசினார்? சென்செய் துறைமுகத்தை நல்லது என்று கூறினாரா ? இல்லையா? சீன மெர்ச்சன்ட் நிறுவனத்தை இலங்கைக்கு அழைத்தாரா? இல்லையா எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் கேள்வியெழுப்பினார்.
மேலும் கைத்தொழில் பேட்டை வலயம் அம்பாந்தோட்டைக்கு வேண்டுமா? வேண்டாமா என்பதை பகிரங்கமாக அறிவிக்கவேண்டும். அம்பாந்தோட்டைக்கு கைத்தொழில் பேட்டை வலயம் வேண்டாம் என்றால் பாராளுமன்றத்தில் பிரேரணை கொண்டு வாருங்கள். அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் பொலிஸ் அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த தயாராகவுள்ளோம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
2017ஆம் ஆண்டின் முதலாவது பாராளுமன்ற கூட்டத்தொடர் நேற்று திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் ஆரம்பமானது.
அதன்போது நிலையியற்கட்டளை 23இன் கீழ் இரண்டில் ஐக்கிய மக்கள் சுதந்திரணி முன்னணியின் கூட்டு எதிரணி ஆதரவாளரான தினேஷ் குணவர்த்தன எம்.பி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தினேஷ் குணவர்தன எம்.பி தனது கேள்வியில், அமைதி வழி போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்படுமா? துறைமுக ஒப்பந்தம் அரசியலமைப்புக்கு உடன்பட்டதா? துறைமுக ஒப்பந்ததினால் அம்பாந்தோட்டை துறைமுகம் எமக்கு இழக்க வேண்டி ஏற்படுவது மாத்திரமின்றி இதன்போது கைத்தொழில் பேட்டை ஆரம்பித்தால் விகாரைகள், தனியார் உடைமைகள் மற்றும் தொல்பொருளியியல் பிரதேசங்களுக்கு பாதிப்பு ஏற்படுமா ? என வினவியிருந்தார்.
இதன்போது பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ,
அம்பாந்தோட்டையில் கைத்தொழில் பேட்டை வலயம் ஆரம்பிக்கப்பட்டமையினால் அங்குள்ள விகாரைகளுக்கோ, தொல்பொருளியியல் பிரதேசங்களுக்கோ, வீடுகளுக்கோ பாதிப்பு ஏற்படாது. தெற்கு பொருளாதார வலயத்தில் 95வீதம் அரச காணிகளையே உபயோகிக்க உள்ளோம். இதில் எந்தவொரு பாதிப்பும் மக்களுக்கு ஏற்படாது. இந்நிலையில் அம்பாந்தோட்டையில் காணிகளை இனங்காண்பதற்கு நான் குழுவொன்றை நியமித்துள்ளேன். அமைச்சர் சாகல ரத்நாயக்க தலைமையிலான குழுவில் இணைத்தலைவராக சமல் ராஜபக்ஷ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் குழுவில் ரஞ்ஜித் மத்தும பண்டார, சஜித் பிரேமதாஸ ஆகியோரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவினால் பரிந்துரைக்கப்படும் காணிகள் உபயோகிக்கப்படும்.
முதலாவது முதலீட்டை இலங்கையரே முன்னெடுப்பார் இந்நிலையில் தெற்கு கைத்தொழில் பேட்டை வலயத்தில் முதலாவது முதலீட்டை இலங்கையரே செய்யவுள்ளார். இதன்பிரகாரம் சிமெந்து தொழிற்சாலை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. அதேபோன்று சீன நிறுவனங்களும் முதலீடுகள் செய்யவுள்ளன. இதன்படி எண்ணெய் சுத்தகரிப்பு நிலையங்களும் வேறு பல பேட்டைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கு அப்பால் அமெரிக்காவுடனும் அரபு நாடுகளுடனும் இன்னுமொரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமொன்றை ஆரம்பிப்பதற்கான பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றோம்.
வேண்டுமா ? வேண்டாமா?
கைத்தொழில் பேட்டை வலயம் அம்பாந்தோட்டைக்கு வேண்டுமா? வேண்டாமா? அம்பாந்தோட்டை இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பு வேண்டாம் தொழிற்சாலைகள் வேண்டாம் எனில் பாராளுமன்றத்திற்கு கைத்தொழில் பேட்டை வேண்டாம் என பிரேரணை கொண்டு வாருங்கள். அப்போது நாம் பேசி தீர்ப்போம். ஏனெனில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட அம்பாந்தோட்டைக்கு வேண்டாம் எனில் பொலன்னறுவைக்கு தருமாறு கோரியுள்ளார். விஜித் விஜயமுனி சொய்ஸா மொனராகலைக்கு தருமாறு கோரியுள்ளார். லக்ஷ்மன் கிரியெல்ல கண்டிக்கு தருமாறு கோரியுள்ளார். கயந்த கருணாதிலக்க காலிக்கு தருமாறு கோரியுள்ளார்.
மஹிந்த தயாரா?
அத்துடன் அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் இரகசியமாக எந்தவொரு ஒப்பந்ததையும் நாம் கைச்சாத்திடவில்லை. இது தொடர்பாக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து விவாதம் நடத்தியதன் பின்னரே ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவோம். எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சென்ற மாதம் சீனாவிற்கு சென்ற போது சீனாவில் என்ன பேசினார். சீனாவிற்கு சென்று மர்சன்ட் நிறுவனத்திற்கு இலங்கைக்கு வருகை தருமாறு அழைத்தாரா ?இல்லையா? சென்செய் துறைமுகத்தை நல்லது என்று கூறவில்லையா? சீன ஜனாதிபதியின் அழுத்தம் காரணமாகவும் சட்டவிரோதமான முறையிலேயே துறைமுகம் தொடர்பான ஒப்பந்தங்கள் சீனாவுடன் கைச்சாத்திடப்பட்டதாக மஹிந்த ராஜபக்ஷ எனக்கு கடிதம் அனுப்பினால் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடுவதனை உடனடியாக கைவிடுவோம். அப்படியாயின் மஹிந்த ராஜபக்ஷவிற்கு கடிதம் எழுத சொல்லுங்கள்.
அம்பாந்தோட்டை அசம்பாவிதம் இதேவேளை அம்பாந்தோட்டை கைத்தொழில் பேட்டை தொடர்பில் அம்பாந்தோட்டை மகாநாயக்க தேரர்களுடன் பேசினேன். இவர்கள் ஒப்புக்கொண்டனர். அமைதியான போராட்டம் மாத்திரம் நடத்துவோம் என்று கூறியமையினால் நான் பொலிஸ் மா அதிபரை அனுகி நீதிமன்ற தடை உத்தரவு தொடர்பில் மீள் பரிசீலனை செய்தோம். ஆனாலும் தடை உத்தரவு குறித்து எனக்கு எவ்வித தொடர்பும் இருக்கவில்லை. எவ்வாறாயினும் அம்பாந்தோட்டையில் நடத்த அசம்பாவிதம் தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.இதற்கான பொலிஸ் விசாரணை அறிக்கை கிடைத்தவுடன இது தொடர்பில் விவாதமொன்றை நடத்த முடியும்.
அம்பாந்தோட்டை மக்கள் எனக்கு வாக்களிக்கவில்லை. ஜனாதிபதி தேர்தலிலும் தான் பாராளுமன்ற தேர்தலிலும் எனக்கு வாக்களிக்கவில்லை. எனக்கு கொழும்பு, கம்பஹா மற்றும் கண்டி மக்களே வாக்களித்தனர். ஆனாலும் நான் வாக்கை பார்க்கவில்லை. அம்பாந்தோட்டை , மொனராகலை மாவட்ட இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கவே முனைகின்றேன். தற்போது நாட்டில் தொழில் பற்றாகுறை நிலவுகிறது. வடக்கு கிழக்கு இளைஞர்களுக்கும் தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொடுக்க வேண்டும். இதன்பிரகாரமே கைத்தொழில் பேட்டை வலயத்தை ஆரம்பித்தேன். அம்பாந்தோட்டை வாக்கு எனக்கு ஒருபோதும் கிடைக்காது என்றார்.