தீவிரவாத, இனவாத மற்றும் குடும்ப ஆட்சி முடிவுற்று மக்கள் நிம்மதி பெருமூச்சுவிடும் ஜனநாயக, நல்லாட்சி மலர்ந்திருக்கின்றது,. இந்த ஆட்சி மாற்றத்திற்கான எமது முயற்சி தோல்வியடையவில்லை என்ற சந்தோசம் எனக்கு எப்போதுமே இருக்கின்றது.
நல்ல தேக ஆரோக்கியத்துடன் தொடர்ந்தும் நல்லாட்சி புரிவதற்கு கடவுளைப் பிரார்த்தித்துக்கொண்டு என் மடலைத் தொடர்கின்றேன்.
எனக்கு இப்போது 30 வயது தாண்டிவிட்டது. நான் மன்னார் மரிச்சிக்கட்டி கிராமத்தை விட்டு அகதியாய் வெளியேறும் போது வயது 5, 1990ம் ஆண்டு பாடசாலையில் இடமில்லாமல் மரத்தடி நிழலில் அமர்ந்து படித்த அனுபவத்துடன் மரிச்சிக்கட்டி கிராமத்தைவிட்டு அகதியாய் வெளியேறினோம். 25 வருடங்கள் கடந்து எங்கள் சந்ததியினர் இன்று அதே போன்று ஒரு மர நிழலில் படித்துக்கொண்டிருப்பதை பார்த்துக் கண்ணீர் வடிக்கின்றேன்.
1990களில் எமது தாய் மண்ணைவிட்டு வெளியேறிய போது எந்த நிலையில் எமது கிராமத்தை விட்டுவந்தோமோ அதே அவலநிலையைத்தான் இன்றும் பார்க்க முடிகிறது.
இக்கிராமங்கள் நூற்றாண்டு கால வரலாற்றுச் சிறம்பம்சங்களை சுமந்தவைகள் என்பதை இக்கிராமங்களை வந்துசெல்கின்ற அல்லது இதன் உண்மையான வரலாறுகளை தேடிப்படிக்கின்ற எவறும் தெரிந்துகொள்வர்.
எமது பாட்டன், முப்பாட்டன்கள் பிறந்த மண், படித்த பாடசாலைகள், வாழ்ந்த வீடுகள், தொழுத பள்ளிகள் சாட்சிகளாய் இன்னும் காட்சிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
இவைகளை இனவாத அல்லது விலாசமற்ற சிலரால் பொய்ப் பிரச்சாரங்கள் செய்து எம்மை மீண்டும் அகதிகளாக்க முயற்சித்துவருவது சகிக்கமுடியாத, ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு மனித உரிமை மீரலாகும் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்த ஆசைப்படுகிறேன்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது 99% மான வாக்குகளை இப்பிரதேச மக்கள் நல்லாட்சியை ஆதரித்து உங்களுக்கு வாக்களித்தவர்கள் என்பதன் மூலம் இங்குள்ள மக்கள் நிம்மதியுடன் போதிய உரிமைகளைப் பெற்றவர்களாக வாழ விரும்புகிறார்கள் என்பதையும் இப்பிரதேச மக்கள் சார்பாக இங்கு ஞாபகப்படுத்துகிறேன்.
மரிச்சிக்கட்டி கிராமம் என்பது வேறு வில்பத்து சரணாலயம் என்பது வேறு, இவை இரண்டுக்கும் வெவ்வேறு எல்லைகள் இருக்கின்றன, இவை அரச ஆவணங்களில் தெளிவாக விவரிக்கப்பட்டிருக்கின்றது. இங்கு வாழ்ந்த மக்கள் 1990களில் யுத்தத்தின் போது அகதிகளாக வெளியேறிச்சென்றமையால் இப்பிரதேசங்கள் காட்டு மரங்கள் வளர்ந்து வில்பத்துவுடன் இணைந்தாற்போல் காட்சிப்படுவதனால் வெளியூர்களிலிருந்து சுற்றுலா வந்து செல்கின்ற மக்களுக்கு எமது கிராமங்கள் சரணாலயங்களாக காட்சிப்படுகின்றன.
கடந்த 30 வருடங்களாக அகதிகளாக முகாம்களில் வாழ்ந்த எமது மக்களை சொந்த நாட்டில் மீண்டும் நிறந்த அகதிகளாக வாழ வைக்க சிலர் முயற்சிசெய்துவருகின்றனர், அதற்காக போலி முகநூல் கணக்குகள் மூலம் பிரச்சாரங்களை மேற்கொண்டுவருகின்றனர் அதற்கு சில ஊடகங்கள் துணைபோவது கவலையான விடயமாகும்.
இந்த வில்பத்து மரிச்சிக்கட்டி பிரச்சினைக்கு நிறந்தர தீர்வு கிடைப்பதற்கு தனியான குழு ஒன்றை அதிமேதகு ஜனாதிபதியின் தலைமையில் நியமித்து சரியான தீர்வுத்திட்டமொன்றை பெற்றுத்தறும்படியும் கடந்த யுத்தத்தின் போது நாம் அடைந்த நக்ஷ்டத்திற்கான நக்ஷ்டஈட்டையும் பெற்றுத்தறுமாறு தயவாய் வேண்டிக்கொள்கிறேன்.
அதேநேரம் இந்த விடயத்தில் போலிப் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் நபர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் படியும் தயவாய் வேண்டிக்கொள்கிறேன்.
இஸ்ஸதீன் றிழ்வான்.
