எம்.ரீ.ஹைதர் அலி-
அம்பலாந்துறை படகு சேவையின் மக்கள் போக்குவரத்திற்கான தங்குமடத்தினை புனரமைப்பு செய்ய பொறியியலாளர் ஷிப்லி பாறுக் நடவடிக்கை.
மட்டக்களப்பு குருக்கள் மடம் வாவியினை கடந்து அம்பலாந்துறை பகுதிக்கு பொதுமக்களின் போக்குவரத்திற்காக இதுவரை காலமும் மதகு சேவையே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
அதிக மக்கள் பயன்பாட்டையுடைய இவ்மதகு சேவையினை பயன்படுத்தும் மக்கள் காத்திருப்பிற்கான தங்குமட வசதி நீண்டகாலமாக முற்றாக சேதமடைந்த நிலையில் உள்ளதோடு இப்பகுதியில் அதிக விசஜந்துக்களும் காணப்படுவதால் இவ்வாவியினூடாக பயணிக்கும் மக்கள் அதிக சிரமங்களை எதிர்கொள்வதாக மக்கள் விடுத்த முறைப்பாட்டிற்கமைய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் கடந்த 26.11.2016ஆந்திகதி குறித்த இடத்திற்கு நேரில் விஜயமொன்றினை மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை நேரில் கேட்டரிந்துகொண்டார்.
இதனைத்தொடர்ந்து வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான இத்தங்குமடத்தினை மீள் புனரமைப்பு செய்து வழங்குவதற்குரிய உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் கௌரவ. ஆரியவதி கலப்பதி அவர்களிடம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் கேட்டுக்கொண்டதற்கிணங்க எதிர்வரும் ஆண்டுக்குள் தங்குமடத்தினை திருத்தியமைத்து வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் வாக்குறுதியளித்தார்.
இதற்கமைவாக 01.12.2016ஆந்திகதி பழுகாமம் பிரதேச சபையின் பிரதேச செயலாளர், பிரதேச சபை செயலாளர் மற்றும் வீதி அபிவிருத்தி தினைக்களத்தினுடைய (RDD) நிறைவேற்று அதிகாரி ஆகியோருடன் குறித்த பகுதிக்கு நேரில் சென்ற கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் இவ்வாவியினூடாக பயணிக்கும் மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதோடு, மேற்கொள்ளப்படவேண்டிய தீர்வுத்திட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது.
இதனடிப்படையில் பிரதேச சபை செயலாளர் மூலமாக இப்பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கணக்கெடுப்புகளை மேற்கொள்வதற்கும், மக்கள் காத்திருப்பிற்கான தங்குமிடம் அமைக்கப்பட்டு வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மூலம் தொடர்ச்சியாக பாரமரிப்புகளை மேற்கொள்வதற்குமான தீர்மானங்கள் இதன்போது நிறைவேற்றப்பட்டது.






