திருகோணமலை-பதவிசிறிபுர பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சிங்ஹபுர பகுதியில் வயலுக்கு காவலுக்குச்சென்ற நபரொருவர் யானையின் தாக்குதலுக்குள்ளான நிலையில் இன்று அதிகாலை (13) உயிரிழந்துள்ளதாக பதவிசிறிபுர பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் பதவிசிறிபுர-சிங்ஹபுர-யாயா 13யைச்சேர்ந்த பீ.ரோஹன ராஜபக்ஷ (45வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது- சிங்ஹபுர பிரதேசத்திலுள்ள வயலுக்கு இருவர் காவலுக்கு சென்று மேலே கட்டப்பட்ட குடிலில் உறங்கிக்கொண்டிருந்த போது குடில் அசைவதை அவதானித்த நேரம் கீழ் பகுதியில் உறங்கிக்கொண்டிருந்த நபரை யானை தாக்குவதை அவதானித்ததாகவும் அதனையடுத்து தொலைபேசியில் பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பு விடுத்து யானையை விரட்டியதாகவும் தெரியவருகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் வயலில் உள்ளதாகவும் நீதவான் பார்வையிட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் பதவிசிறிபுர பொலிஸார் தெரிவித்தனர்.
