அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட்டை பதவி நீக்கம் செய்து விட்டு அப்பதவிக்கு எஸ்.சுபைர்தீன் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்நியமனத்துக்கு இடைக்கால தடையுத்தரவு வழங்குமாறு வை.எல்.எஸ்.ஹமீட் தாக்கல் செய்திருந்த வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை கட்சி எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதில் பல சிக்கல்களைத் தோற்றுவிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதத்தில் நடாத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவும் உறுதியளித்துள்ளமையினாலேயே அ.இ.ம.கா.வுக்கு இந்த சிக்கல்நிலை தோன்றியுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரினால் செயலாளர் நாயகமான தன்னை கட்சியின் யாப்பின்படி பதவி நீக்கம் செய்ய முடியாதெனவும் தன்னை பதவி நீக்கிவிட்டு எஸ்.சுபைர்தீனை செயலாளராக நியமித்துள்ளமை கட்சியின் யாப்புக்கு முரணானதெனவும் வை.எல்.எஸ்.ஹமீட் நீதி மன்றில் வழக்கொன்றினைத் தாக்கல் செய்திருந்தார்.
செயலாளர் பதவி நியமனத்துக்கு இடைக்கால தடையுத்தரவொன்றினைக் கோரியிருந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 6 ஆம் திகதி வழங்கப்படவிருந்த நிலையில் தீர்ப்பு வழங்குவது எதிர்வரும் மார்ச் 9 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்விவகாரம் கட்சியின் உள்ளூராட்சி தேர்தல் நடவடிக்கைகளுக்கும் பாதகமாக அமையுமா என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் எஸ்.சுபைர்தீனை தொடர்பு கொண்டு வினவிய போது அவர் பின்வருமாறு பதிலளித்தார். “வை.எல்.எஸ்.ஹமீட் செயலாளர் பதவி நியமனத்துக்கே இடைக்கால தடையுத்தரவு கோரியுள்ளார்.
இது உள்ளூராட்சி தேர்தல் நடவடிக்கைகளையும் கட்சி போட்டியிடுவதையும் பாதிக்காது வழக்கு தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பு தேர்தல் நடைபெறுமாயின் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு கட்சி தேர்தல் நடவடிக்கைகளைத் தொடர உத்தரவு வழங்குவதற்கு அதிகாரமிருக்கிறது. கட்சிக்கு மக்களிடமுள்ள ஆதரவு, செல்வாக்கு என்பனவற்றினை அடிப்படையாகக் கொண்டு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தீர்மானம் மேற்கொள்வார் என்றார்.
வை.எல்.எஸ்.ஹமீட்டை ‘விடிவெள்ளி’ தொடர்பு கொண்டு செயலாளர் நாயகம் பதவி தொடர்பாக கருத்து வினவியபோது அவர் பின்வருமாறு விளக்கமளித்தார்.
‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் பிரச்சினை தற்போது தீர்க்கப்பட்டுள்ளது. ஆனால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் பிரச்சினை முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் பிரச்சினையிலிருந்தும் வேறுபட்டதாகும்.
வெளிப்படையில் சில ஒற்றுமை தோற்றப்பாடுகள் இருக்கின்ற பொழுதிலும் கூட அ.இ.ம. காங்கிரஸின் பிரச்சினை என்பது ஒரு முழுமையான தேசிய பட்டியல் பிரச்சினை அல்ல. நான் ஒரு போதும் தேசிய பட்டியல் எம்.பி. பதவி கோரியிருக்கவில்லை. நான் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆயத்தங்களையே செய்து கொண்டிருந்தேன்.
ஆனால் 6 மாத காலமாக கட்சியின் தலைவர் தேர்தலில் நான் போட்டியிடுவதைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். இந்தப் பின்னணியிலே தேசியப்பட்டியல் பிரச்சினை எழுந்தது. என்னை தேர்தலில் போட்டியிடுவதிலிருந்தும் தடுத்தார் என்றாலும் நான் தேசியப் பட்டியல் விடயத்தில் எதுவித ஆர்வமும் காட்டவில்லை.
2015 செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி தேர்தல் நடந்தது. செப்டெம்பர் 20 ஆம் திகதி இரவு 10மணிக்கு சிறிகொத்தாவிலிருந்து தேர்தல்கள் ஆணையாளருக்கு தேசியபட்டியல் விபரம் அனுப்பப்பட்டது. அன்று இரவு 12 மணிக்கும் 1 மணிக்குமிடையில் கட்சித் தலைவரை செயலாளர் நாயகம் பதவி நீக்கிவிட்டதாக முகவரியில்லாத ஒரு முகநூலில் செய்தி வெளியாகியது.
21 ஆந் திகதி கட்சியின் தலைவர் அமைச்சர் ரிசாத் சட்டத்தரணிகளை அழைத்துக்கொண்டு தேர்தல் ஆணையாளரிடம் சென்றார். அதே 21 ஆம் திகதி 10 வேட்பாளர்களின் பெயரில் எனக்கெதிராக சேறு பூசும் அறிக்கை வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 5 நட்சத்திர ஹோட்டலில் நான் கட்சியிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஊடக மாநாடு நடத்தி அமைச்சர் ரிசாத் அறிவித்தார். என்றாலும் நான் எதுவித அறிக்கையும் விடவில்லை. ஒரு சிறிய பேட்டியொன்றினையே வழங்கியிருந்தேன்.
அந்தப் பேட்டியில் கட்சியின் யாப்பின்படி தலைவரை செயலாளரோ? செயலாளரை தலைவரோ பதவி நீக்க முடியாதென்றும் கட்சியின் தலைவர் என்னை இடைநிறுத்தியது தொடர்பாக எழுத்து மூலம் அறிவிக்கவும் இல்லை எனவும் கூறியிருந்தேன்.
இந்நிலையிலே கட்சியின் தலைவர் தேர்தல் ஆணையாளருக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதற்கான விளக்கங்களையும் நான் வழங்கியிருந்தேன்.
இந்நிலையிலே கட்சியின் யாப்பினை பின்பற்றாது பேராளர் மாநாட்டினைக் கூட்டி செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டார். முஸ்லிம் காங்கிரஸில் ஒரு தனிநபருக்கு அதிகாரம் இருப்பது கூடாது என்று போராடித்தான் நாம் அக்கட்சியிலிருந்து வெளியேறி அகில இலங்கை மக்கள் காங்கிரஸை ஆரம்பித்தோம்.
ஒரு தலைமைத்துவ சபையை யாப்பில் குறிப்பிட்டோம். எனது போராட்டம், கொள்கை மாற்றம் இதய சுத்தியுடனான போராட்டமே தவிர ஒரு தேசியப் பட்டியல் போராட்டமல்ல.
அதேநேரம் எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் வை.எல்.எஸ்.ஹமீட் பாராளுமன்றம் சென்று விடக்கூடாது என்று திட்டம் தீட்டப்பட்டுச் செயற்பட்டுள்ளமை தெளிவாகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நன்றி - விடிவெள்ளி
