நூற்றுக்கணக்கான உலமாக்களை உருவாக்கிய காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கலாசாலையின் அதிபர் எம்.எம்.ஏ. அப்துல்லாஹ் (ரஹ்மானி) ஹஸரத்தின் மறைவு குறித்து தாம் ஆழ்ந்த கவலையடைவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அன்னாரின் மறைவு குறித்து அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிராம்பட்டினத்தை பிறப்பிடமாகக் கொண்ட ஷெய்குல் பலாஹ் அப்துல்லாஹ் ஹஸரத், இலங்கையை ஐந்தரை தசாப்த காலங்களுக்கு மேலாக வசிப்பிடமாகக் கொண்டிருந்தார். காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் கலாசாலையில் மட்டுமன்றி, அன்னார் முன்னர் அட்டாளைச்சேனை அரபுக் கல்லூரியிலும் விரிவுரையாளராக கடமையாற்றியுள்ளார். அன்னாரிடம் கற்றுத் தேர்ந்த உலமாக்களும், ஹாபிழ்களும் இந் நாட்டின் எல்லா பிரதேசங்களிலும் சன்மார்க்கப் பணிபுரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
பிரச்சினைகளுக்கு புதிய தீர்வுகளை காண்பதிலும், முரண்பாடுகளை களைவதிலும் அன்னார் அவ்வப்போது உரிய ஆலோசனைகளை வழங்கி வந்தார். எங்களுக்கும் அவர் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.
கிழக்கிலங்கையில் மட்டுமல்லாது, கடல்கடந்த நாடுகள் பலவற்றிலும் அன்னார் நன்கறியப்பட்ட சன்மார்க்க அறிஞர்களில் ஒருவராக பெரிதும் மதிக்கப்பட்டு வருகிறார்.
மர்ஹூம் அப்துல்லாஹ் ஹஸரத்துக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் மேலான ஜன்னதுல் பிர்தௌஸூல் அஃலா என்ற சுவனபதியை அருளப் பிரார்த்திப்பதோடு, அன்னாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், உலமாக்களுக்கும், ஏனையோருக்கும் தனிப்பட்ட முறையிலும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் காணப்படுகிறது.