முஸ்லிம் மாதர்களின் ஆடைகள் தொடர்பாக சமூகத் தளத்தில் பல்வேறு கருத்தாடல்கள், வாதப் பிரதி வாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன, முஸ்லிம் மாதர் முகம் கரங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளை மறைத்து, அங்க அவயவங்களின் அலங்காரங்கள் கவர்சிகள் புலப்படாத வண்ணம் தளர்வான ஆடைகளை அணிதல் வேண்டும்.
இலங்கையில் பன்னெடுங்காலமாக ஷாபியி மதஹாப் நிலைப்பாட்டிலும், இந்த நாட்டில் உள்ள சீதோஷன சமூக கலாசார உலமாக்கள் மேற்படி நடைமுறையினை அனுமதித்து பின்பற்றி வந்தனர்.
“இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும் ….”(ஸுரத்துன் நூர் 24:31)
முகத்தை முழுவதும் திரையிடுவது கட்டாயம் எனக் கருதும் நிலைப்பாட்டை கொண்டுள்ளோர் அதனை பின்பற்றுவது அவர்களது சுதந்திரமும் தெரிவுமாகும். அதே போன்று அடுத்த நிலைப்பாட்டில் இருப்பவர்களை ஹராத்தை செய்பவர்களாகவும் வழிகேடர்களாகவும் காபிர்களாகவும் அழைப்பது அறியாமையாகும்.
உலகில் பல பாகங்களிலும் அவ்வப் பிரதேசங்களில் செலவாக்குச் செலுத்துகின்ற மத்ஹபுகள், நவீன சிந்தனைப் பள்ளிகள் கொண்டுள்ள நிலைப்பாடுகளிற்கு ஏற்ப மேற்படி விவகாரத்தில் மக்கள் பல்வேறுபட்ட முறைகளையும் பின்பற்றி வருகின்றார்கள்.
ஜமாத்தே இஸ்லாமி ,தப்லீக் ஜமாஅத் ஆகியவற்றின் செல்வாக்கு மிகுந்த இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் ஹனபி மத்ஹப் நிலைப்பாட்டையும், வளைகுடா அறபு நாடுகளில் ஹன்பலி, மாலிகி மத்ஹப் நிலைப்பாடுகளையும், சிலவேளை ஆண்கள் வெள்ளை பெண்கள் கருப்பு ஆடை அணியும் நவீன கலாசார முறைகளை மக்கள் பின்பற்றுகின்றார்கள்.
ஆபிரிக்க நாடுகளில் லாஹிரி மாலிகி ஷாபிஈ என பல நிலைப்பாடுகளிலும் மக்கள் ஆடைகளை அணிகின்றார்கள், அண்மைகாலமாக பலஸ்தீன், லெபனான், ஜோர்டான் உற்பட பல மத்திய கிழக்கு நாடுகளில் ஜீன்ஸ் பான்ட் உடன் மேலாடைகளை அன்யும் அளவிற்கு மேலைத்தேய கலாசார தாக்கங்களும் ஏற்பட்டுள்ளன.
கருப்புநிற ஆடைகளை தான்பெ ண்கள் கட்டாயம் அணிய வேண்டும் என்பதில்லை, வாழுகின்ற நாட்டின் சீதோஷன நிலைகளை கருத்தில் கொண்டு அதிக கவர்ச்சியற்ற தளர்வான ஆடைகளை அவர்கள் தாராளமாக அணியலாம்.
மாதர்கள் முகம்மூடி அணிந்தாலும், முகம்திறந்து அணிந்தாலும் அங்க அவயவங்களை புலப்படுத்துகின்ற கவர்ச்சியான இறுக்கமான ஆடைகளை அணிவதும் அவற்றை சந்தைப் படுத்துவதும் தவறாகும்.
அத்தோடு எத்தகைய ஆடைகளை அணிந்தாலும் மஹரம் துணையின்றி பொது இடங்களிலும், பொது போக்கு வரத்துகளிலும் தனித்து அலைந்து திரிவதை கண்டிப்பாக நாம் தவிர்ந்து கொள்ளல்வேண்டும், பொது இடங்களில் இஸ்லாமிய ஆடைகளை அடுத்தவர்கள் தரக்குறைவாக கருதும் வண்ணம் நடந்து கொள்வதும் தவிர்க்கப் படவேண்டிய விடயங்களாகும்.
பாதுகாப்பு காரணங்களிற்காக பரிசோதனைகள் இடம் பெறின் பெண் அதிகாரிகளின் துணையுடன் நாம் பாதுகாப்பு தரப்பினருக்கு நிபந்தனைகளுடன்கூடிய ஒத்துழைப்பை வழங்கலாம், அதேபோன்றே ஆள் அடையாள அட்டைகளிற்கான புகைப்படத்தை எடுத்துக் கொள்வதற்காக தமது முகத்திரையை ஓரளவு நகர்த்துவதில் மார்க்கத்தில் எந்த தடையும் இல்லை.
மாதர்களது ஆடைகள் மாத்திரமன்றி ஆண்களது ஆடைகள் விடயத்திலும் சமூகம் அதிக கரிசனை காட்டுதல் வேண்டும், தமது அங்க அவயவங்களை அச்சொட்டாக காட்டுகின்ற கவர்சிகரமான இறுக்கமான ஆடைகளை ஆண்களும் தவிர்ந்து கொள்ளவேண்டும்.
நவீன வடிமைப்புகளில் வரும் இடுப்பிற்கு கீழ் வழிந்தோடும், உள்ளாடைகளை அல்லது பின்புறத்தின் ஒரு பகுதியை வெளிக் காட்டும் கேவலமான ஆடைகளை இளைஞர்களும் தவிர்ந்து கொள்ளல் வேண்டும்.
முஸ்லிம் ஆடவருக்கும், மகளிருக்கும் பொருத்தமான தளர்வான ஆடைகளை வடிவமைத்து சந்தைப்படுத்தக் கூடிய தொழில் முனைவர்கள் இன்று அவசியப் படுகின்றனர்.
குறிப்பாக இஸ்லாம் ஏன் ஆடைவிடயத்தில் அதிக கரிசனை செலுத்துகின்றது என்ற அடிப்படை இலக்குகளை மனதில் கொள்வது பல்வேறு கேள்விகளிற்கு பதில்களைத் தரும்.
எமது ஆடைகளும், பண்பாடுகளும் எங்களுக்கிடையில் பரஸ்பர நல்லுறவை சகோதரத்துவத்தை ஏற்படுத்த வேண்டும், தீமைகளில் இருந்தும் தீங்குகளில் இருந்தும் எங்கள் தாய்க்குலத்திற்கும் சமூகத்திற்கும் பாதுகாப்பை தரவேண்டும், மாறாக அவற்றை மையமாக வைத்து நாமே பிளவுகளையும் பிணக்குகளையும் வன்முறைகளையும் உள்ளிருந்தும் புறமிருந்தும் வரவழைத்துக் கொள்ள வேண்டியதில்லை.
மாதர்களின் ஆடைகளில் கரிசனை செலுத்தும் ஒரு சமூகம் மாதர்களுக்கு எதிரான சமூக பொருளாதார கலாச்சார அநீதிகளையும் களைவதற்கு மாநாடுகளை நடத்த வேண்டும், நோய்களிற்குரிய அடிப்படை காரணிகளை கண்டு அவற்றிற்கு நாம் வைத்தியம் செய்ய தவறி விடுகின்றோம்.
உதாரணமாக இஸ்லாமிய ஆடையணிந்து மஹ்ரம் துணையுடன் மாதர் வீட்டைவிட்டு வெளியேறுவதை வலியுறுத்தும் ஒரு சமூகம் தமக்கொரு துணையை விலை கொடுத்து வாங்குவதற்கென வீட்டைவிட்டு வெளியேறி உழைக்கும் நிலையை கடல்கடந்து பயணிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ள சமூக கொடுமைகள் அநீதிகளை கண்டு கொள்ளாமல் இருக்கின்றமை தான் ஆச்சர்யமானது.
பெண்கள் குறித்த சட்டங்களை விதிக்கும் இஸ்லாம், ஹிஜாப், மஹ்ரம் பற்றி பேசுவதோடு நின்றுவிடவில்லை; மாறாக இஸ்லாத்தின் நிழலில் பெண்களின் அந்தஸ்து ஆண்கள் மீதான கடமைகள் பொறுப்புக்கள், அவர்களுடைய உரிமைகள் பற்றியெல்லாம் பரந்த முழுமையான ஒரு பரப்பில் பேசியிருக்கின்றது.
"(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள்.... " (ஸுரத்துன்நிஸா 4:34)
இஸ்லாத்தை பகுதி பகுதியாக பின்பற்றாது முழுமையான வாழ்வு நெறியாக நாம் எடுத்துக் கொள்கின்ற பொழுது ஏகப்பட்ட பிரச்சினைகளிற்கு தீர்வுகள் கிடைக்கின்றன.