ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கை சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டால் பங்காளிகளின் நிலைமையை அறிந்துகொள்ளலாம். இனவாத கட்சி ஆரம்பித்தால் அன்றி அரசியல் இருப்பிடம் இல்லாமல்போகும் என நவசமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
நவசமசமாஜ கட்சி காரியாலயத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65ஆவது சம்மேளனம் எதிர்வரும் 4ஆம் திகதி இடம்பெறவுள்ளது. சம்மேளனத்தில் கலந்துகொள்ளாத கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக கட்சியின் செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் மஹிந்த அணியினர் என்னசெய்வதென்று தெரியாமல் இருக்கின்றனர்.
அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எதிர்வரும் தேர்தல்களில் தனது கை சின்னத்திலேயே போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறு நடைபெற்றால் மஹிந்தவுடன் இருப்பவர்களுக்கு பாரிய பிரச்சினை ஏற்படுகின்றது. அத்துடன் இதுவரைகாலமும் சுதந்திர கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு வந்த கம்யூனிஸ்ட் கட்சியினர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து போட்டியிட்டாலும் பொதுச்சின்னதிலேயே போட்டியிட்டதாக தெரிவித்து வந்தனர். ஆனால் தற்போது அவர்களுக்கும் சிக்கல் நிலை ஏற்படும்.
மேலும் சுதந்திர கட்சியில் பங்காளிகளாக இருந்த விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்த்தன மற்றும் உதய கம்மன்பில போன்றவர்களும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்தே போட்டியிட்டு வந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் பொதுக்கட்சி அமைத்து நீல நிறத்தில் முன்னுக்கு வந்தால் அது அவர்களுக்கு தோல்வியையே ஏற்படுத்தும். அவ்வாறு என்றால் அவர்கள் இனவாத அடிப்படையிலான கட்சி ஆரம்பித்து முன்னுக்கு செல்லவேண்டும். சுதந்திர கட்சியின் இந்த தீர்மானமானது இனவாதிகள் பாஸிசவாதிகளை இனம் கண்டுகொள்வதற்கான சிறந்த சந்தர்ப்பமாகும்.