சுலைமான் றாபி-
ஜனாதிபதி செயலகம், விவசாய அமைச்சு மற்றும் விவசாயத்திணைக்களத்தின் உணவு உற்பத்தி தேசிய செயற்திட்டம் 2016-2018 கீழ் "நெல் வீட்டுக்கு, வைக்கோல் வயலுக்கு" எனும் தொனிப்பொருளில் நிந்தவூர் கமநல சேவைகள் மத்திய நிலையம், நிந்தவூர் பிரதேச செயலகத்துடன் இணைந்து நிந்தவூர் நலன்புரிச் சபையின் ஊடகப் பங்களிப்புடன் வைக்கோலை எரிப்பதற்கு எதிரான மாபெரும் விழிப்புணர்வுப் பேரணி நேற்று (15) திங்கட் கிழமை நிந்தவூர் பிரதேச செயலகம் முன்பாக ஆரம்பித்து நிந்தவூர் அல்லிமூலைச் சந்தி வரை நிறைவடைந்தது.
வேளாண்மைச் செய்கையில் வைக்கோலின் மூலம் உற்பத்திச்செலவினைக் குறைத்து அதன் மூலம் சிறந்த விளைச்சலைப் பெற்று விவசாயிகள் தங்களது வருமானத்தினை அதிகரித்துக் கொள்வதற்காகவும், ஆரோக்கியமான சமூகத்தினை உருவாக்கி அவர்களை தொற்றா நோய்களில் இருந்து காப்பாற்றுவதற்காகவும் இந்த விழிப்புணர்வுப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலும் விவசாய நிலங்களில் வைக்கோலை எரிக்காமல் விடுவதினால்
நெற்பயிர்களுக்குத் தேவையான 17 வகையான மூலக் கூறுகள் இதன் மூலம் கிடைப்பதோடு, இரசாயன உரத்தினை கொள்வனவு செய்வதற்கான பணமும் மீதப்படுத்தப்படுகின்றது. இது தவிர நிலத்தில் உள்ள நன்மை தரும் பூச்சிகளும் பாதுகாக்கப்பட்டு விளைச்சலில் தரம் அதிகரிக்கப்படுவதோடு அதன் வருமானமும் 25% அதிகரிக்கப்படுவதாகவும் இந்த பேரணியில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை சிறுபோக நெல் அறுவடையின் பின்பு வைக்கோலை எரிக்கும் வயற் சொந்தக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதோடு இவர்களுக்கு எதிர்வரும் பெரும் போகத்தில் நெற்பயிற்செய்கைக்கான உர மானியம் வழங்கப்படாது எனவும் இத்தனையும் மீறி வைக்கோலை எரிக்கும் வயல் சொந்தக்காரர்களுக்கு எதிராக ஒரு ஏக்கரிற்கு தலா ஐயாயிரம் (5,000/=) ரூபா தண்டப்பணமும் அறவிடப்படுமென தலைமைக்காரியாலய சிரேஷ்ட கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.ஏ ஹார்லிக் தெரிவித்தார்.
இதேவேளை இந்த விழிப்புணர்வுப் பேரணியில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம். ஐ. அமீர், நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி ஆர். யு. அப்துல் ஜலீல், தேசிய உணவு உற்பத்திப் பிரிவின் பிரதிப்பணிப்பாளர் எம்.எம். அலியார், விவசாய போதனாசிரியர்கள், சுகாதார பிரதியமைச்சரின் பிரதேச செயலக இணைப்பாளர் எம். வை.எம். நஜீப், நிந்தவூர் நலன்புரிச் சபையின் தவிசாளர் யாக்கூப் ஹசன், திட்ட முகாமையாளர் உமர் அலி, பொது சுகாதார பரிசோதகர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், நிந்தவூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர்கள் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.