கிழக்கில் தரமுயர்த்தப்பட்ட வைத்தியசாலைகளின் விபரங்களை வெளியிட முடியுமா.? எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை

எம்.ஜே.எம்.சஜீத்-
கிழக்கு மாகாண சபையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னர் கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவையால் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள பல வைத்தியசாலைகள் தரமுயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியாயின் இதுவரை தாங்கள் சுகாதார அமைச்சராக பதவி ஏற்றதன் பின்னர் கிழக்கு மாகாணத்தில் தரமுயர்த்தப்பட்ட வைத்தியசாலை ஒன்றின் பெயரை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரினால் இச்சபையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்க முடியுமா? என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரிடம் எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ் உதுமாலெப்பை கேள்வி எழுப்பினார்.

கிழக்கு மாகாண சபையின் 62வது சபை அமர்வு தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் நேற்று (25) நடைபெற்றது.

இதன்போதே எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை கிழக்கு மாகாண சுகாதாரத்துறை அபிவிருத்தி தொடர்பில் சுகாதார அமைச்சரிடத்தில் பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் நடைபெற்ற சுகாதார அமைச்சர்களின் மாநாட்டில் கிழக்கு மாகாணத்தில் சிறந்த வைத்தியசாலைகளாக தரமுயர்த்துவதற்கு அம்பாரை பிராந்திய சுகாதார பணிமனை பிரிவுக்குள் தெஹியத்தக்கன்டிய வைத்தியசாலையும், கல்முனை பிராந்திய சுகாதார பணிமனைப்பிரிவில் சம்மாந்துறை வைத்தியசாலையும், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனைப்பிரிவில் வாழைச்சேனை வைத்தியசாலையும், திருகோணமலை பிராந்திய சுகாதார பணிமனைப்பிரிவில் மூதூர் வைத்தியசாலையும் தரம் உயர்த்துவதற்கான அனுமதியினை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார்.

அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலை ஆதரா வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரினால் அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியாயின் அவ்வைத்தியசாலை உத்தியோகபூர்வமாக ஆதார வைத்தியசாலையாக எப்போதிருந்து தரமுயர்த்தப்பட்டுள்ளது? என்பதனை கிழக்கு மாகாண சபைக்கு சுகாதார அமைச்சர் தெரிவிக்க வேண்டும். 

மேலும் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், இந்தவருடம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் நிதியிலிருந்து ரூபா 40 மில்லியனும், மத்திய சுகாதார அமைச்சின் நிதியிலிருந்து ரூபா 40 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தவருடம் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. என்பதனை இச்சபையில் தெரிவிக்க வேண்டும் எனவும் உதுமாலெப்பை தெரிவித்தார்.

இக்கேள்விகளுக்கு பதில் அளித்த கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் கிழக்கு மாகாண அமைச்சரவையில் பல வைத்தியசாலைகளை தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாக தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இந்த வருடம் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திக்கு 20 மில்லியனும், 2017ம் வருடத்தில் 20 மில்லியனும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -