கவிஞர் வெலிப்பன்னை அத்தாஸ் எழுதிய 'உன்னத வாழ்வு' கவிதை நூல் வெளியீட்டு விழா கடந்த 31-7-2016 ஞாயிறு மாலை 3.30 க்கு வெலிப்பன்னை ரஹ்மானிய்யா மஹா வித்தியாலய யூஸுப் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்த்தென்றல் அலி அக்பர் தலைமையில் நடைபெற்ற விழாவில் இலக்கியப் புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர் விசேட அதிதியாக கலந்து கொண்டார்.
நூல் மீளாய்வினை இரத்மலான இந்துக் கல்லூரி அதிபர் எஸ். ஜெயகுமார் மேற்கொண்டார். அவர் தனதுரையில்,
' வெலிப்பன்னை அத்தாஸின் கவிதைகள் மானுடத்தைப் பற்றியும் இறைவனோடு நாம் வைக்க வேண்டிய தொடர்பு பற்றியும் அதிகம் பேசுகிறது. தான் எழுதுவதற்கு செயலுரு கொடுக்கும் கவிஞராக நான் அத்தாஸ் அவர்களை அறிவேன். மலையக மக்களின் கல்வியின் உயர்வு குறித்த தனது அவாவை வெளிப்படுத்தியுள்ளார். ஆம் அவர் பாடசாலை அதிபராக இருந்தபோது பாடசாலைக்கு தொடர்ந்து வருகை தராதிருந்த மாணவர்களின் வீடுகளை தேடிக்கண்டுபிடித்து அவரே பிரத்தியேகமாக சென்று அவர்களது குறைகளைத் தெரிந்து கொண்டு அவற்றை நிவர்த்தி செய்திருக்கிறார். அவர்கள் கல்வியை தொடர வழி வகுத்துள்ளார். இந்தக் கவிஞர் சமுதாயத்தால் பாராட்டப்பட வேண்டியவர்' என்றார்.
வரவேற்புரையை ரஹ்மானியா கல்லூரி அதிபர் கௌசுல் அமீர் நிகழ்த்தினார். நூல் அறிமுகத்தை வலம்புரி கவிதா வட்டத் தலைவர் என். நஜ்முல் ஹுசைன் மேற்கொண்டார்.
கலாபூஷணம், இலக்கிய மாமணி கவிஞர் ஏ.இக்பால், கவிஞர் மேமன்கவி, வகவ செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன், சிங்களர் இலக்கிய மன்ற செயலாளர் ஜெயசிங்க ஆகியோர் விசேட உரை நிகழ்த்தினர்.
பேருவளை நபவிய்யா கல்வி நிலைய அதிபர் ஏ.எச்.எம்.முபாரக், கலாபூஷணம் பாணந்துறை நிஸ்வான் ஆகியோர் சிறப்பதிகளாக கலந்து கொண்டனர். நூலின் முதல் பிரதியை புரவலர் ஹாசிம் உமரிடமிருந்து நஜீப் ஹாஜியார் கல்வி நிலைய பணிப்பாளர் டாக்டர் ஹுஸ்னா நஜீப் (எம்.பி.பீ.எஸ்) பெற்றுக்கொண்டார்.
வாழ்த்துக் கவிதைகளை காவ்யாபிமானி கலைவாதி கலீல் மற்றும் சிங்களத்தில் சந்திரவன்ச ஆகியோரும் பாடினர். நூலாசிரியர் அத்தாஸின் பேத்தி ஆயிஷா ஷெய்னப் அஸாட்டும் தாத்தாவை வாழ்த்தி கவிதை வாசித்தார். நிகழ்ச்சிகளை கிண்ணியா அமீர் அலி தொகுத்து வழங்கினார். நன்றியுரையை படிப்புவட்ட செயலாளர் எஸ்.எச்.எம்.இல்யாஸ் மேற்கொள்ள நூலாசிரியர் வெலிப்பன்னை அத்தாஸ் ஏற்புரை வழங்கினார்.
நிகழ்வினை வெலிப்பன்னை ரஹ்மானிய்யா மஹா வித்தியாலய பாடசாலை அபிவிருத்தி சங்கமும், வெலிப்பன்னை படிப்பு வட்டமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.