க.கிஷாந்தன்-
மாணவர்களிடம் அதிபர், ஆசிரியர்கள் எவ்வாறு அக்கறை செலுத்துகின்றார்களோ அவ்வாறு பெற்றோர்களும் அக்கறை செலுத்த வேண்டும். அப்பொழுது தான் மாணவர்கள் சமூகத்தில் சிறந்த தலைவராக விளங்குவார்கள் என மத்திய மாகாண விவசாயதுறை, இந்து கலாசார மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் எம்.ரமேஷ்வரன் தெரிவித்தார்.
மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் தரம் ஐந்துக்கான அறிவொளி இலவச விசேட முன்னோடி பரீட்சை 09.07.2016 அன்று அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்வூட் அயரபி பாடசாலையில் மன்றத்தின் தலைவர் மு.சிவக்குமார் தலைமையில் இடம்பெற்றது.
இதில் அமைச்சர் எம்.ரமேஷ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அட்டன் வலய கல்வி பணிப்பாளர் பி.ஸ்ரீதரன், மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மன்றத்தின் அட்டன் வலய இணைப்பாளர் மற்றும் தலவாக்கலை வலய இணைப்பாளர், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அவர் மேலும் இங்கு உரையாற்றுகையில்:
சமூகம் முன்னேற வேண்டுமானால் கல்வி வளர்ச்சி முன்னேற வேண்டும். இன்று மலையகத்தில் குடிசை பாடசாலைகள் இல்லை. எல்லாம் மாடிகள் வைத்த பாடசாலைகள் தான் காணப்படுகின்றது. அத்தோடு தேவையான வளங்களும் கிடைக்கப்பெறுகின்றன.
ஆனால் வடக்கு கிழக்கில் குடிசையில் தான் சில பாடசாலை மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள். ஆனால் யுத்த காலத்திலிருந்து இன்று வரை அவர்கள் தான் சிறந்த பெறுபேறுகளை பெறுகின்றார்கள். மாணவர்கள் முதலிடத்தையும் தக்க வைத்துக் கொள்கின்றார்கள்.
ஏன்னென்றால் கல்வியில் வளர்ச்சி அடைய வேண்டும் என மாணவர்களும், பெற்றோர்களும், அதிபர், ஆசிரியர்களும் எண்ணுகிறார்கள். அதனால் தான் கல்வி வளர்ச்சியில் முன்னேற்றம் கண்டு சிறந்த பெறுபேறுகளை பெற்று வடக்கு, கிழக்குக்கு ஒரு புகழை பெற்றுக் கொடுக்கின்றார்கள்.
ஆனால் நாங்கள் இன்னும் குறை கூறி கொண்டிருக்கின்றோம். எனவே மலையக கல்வி வளர்ச்சியில் மாணவர்கள் மட்டுமல்லாது பெற்றோர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் என அனைவரினதும் பங்களிப்பு அவசியமானதாகும். அப்பொழுது தான் மலையகத்தில் கல்வியில் வளர்ச்சி ஏற்படும் என்றார்.