சௌதி அரேபியாவில் இஸ்லாத்தின் மிகப் புனித ஸ்தலங்களில் ஒன்றாகக் கருதப்படும் மதினா நகரில் உள்ள முகமது நபி மசூதிக்கு வெளியே தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்று நடந்ததாக செய்திகள் வந்துள்ளன.

சமூக ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்ட வீடியோ படங்கள் அங்கிருந்து கரும்புகை எழுவதையும், ஒரு கார் எரிவதையும் காட்டுகின்றன. இரண்டு பேர் பலியாகியிருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என்று செய்திகள் கூறுகின்றன.
இந்த மசூதியில்தான் முகமது நபியின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம், கிழக்கு பகுதி நகரான கத்திஃப் நகரில் உள்ள ஒரு ஷியா மசூதிக்கு அருகே தற்கொலை குண்டு ஒன்று வெடித்த சம்பவத்தைத் தொடர்ந்து வருகிறது.
அந்த சம்பவத்தில் குண்டுதாரி மட்டுமே கொல்லப்பட்டார் வேறு எந்த உயிர்ச்சேதமும் விளையவில்லை. இன்று திங்கட்கிழமை முன்னதாக, ஜெட்டா நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு அருகே நடந்த மற்றொரு தற்கொலை குண்டு தாக்குதலில் இரண்டு பாதுகாப்பு காவலர்கள் காயமடைந்தனர்.தற்கொலை குண்டுதாரி கொல்லப்பட்டார்.