எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்ட சாரணர் சங்கம் நடத்தும் 4வது சாரணர் ஜம்போறி எதிர்வரும் 8ம் திகதி தொடக்கம் 12ம் திகதி வரை சர்வோதயம் மாவட்ட நிலையத்தில் நடைபெற உள்ளது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 3000 க்கும் அதிகமான சாரணர்கள் பங்கு கொள்ள உள்ளனர்.
முன்னர் இம்முகாம் இம்மாதம் 25ம் திகதி தொடக்கம் 29ம் திகதி வரை நடத்தப்பட இருந்தது. நாட்டில் எற்பட்டிருந்த இயற்கை சீற்றம் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மண்சரிவுகள் காரணமாக இது பிற்போடப்பட்டு இருந்தது.
திருகோணமலை> மட்டக்களப்பு> யாழ்ப்பாணம்> நுவரெலியா> கேகாலை> மன்னார்> கொழும்பு களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இருந்து பெருமளவிலான சாரணர்கள் பங்கு கொள்ள உள்ளனர். ஆரம்பநிகழ்வில் கிழக்கு மாகாண முதல் அமைச்சர் நசிர் அகமட் அவர்கள் கலந்து கொண்டு இதனை தொடக்கி வைக்க உள்ளார். யுனிசெப் நிறுவம் இம்முகாமிற்கான அனுசரணையை வழங்கி உள்ளது.
திருக்கோணேஸ்வரம்> கன்னியா> சேருவில ஆகிய உப முகாம்களில் சாரணர்கள் தங்கி இருந்து தமது செயற்பாடுகளை மேற்கொள்ள உள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் முக்கிய இடங்களுக்கும் வெளி மாவட்ட சாரணர்கள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இம்முகாமிற்கு வேண்டிய உப அனுசரணைகைள இலங்கை இராணுவத்தினரும் கடற்படையினரும் பொலிசாரும் வழங்கி வருகின்றனர்.
திருகோணமலை மாவட்ட சாரணர் சங்கத்தின் தலைவர் வலயக் கல்வி பணிப்பாளர் ந.விஜேந்திரன் தலைமையில் மாவட்ட ஆணையாளர் க.உமாபதிசிவம் அவர்களின் வழிகாட்டலில் உதவி மாவட்ட ஆணையார் இ.சத்தியராஜன் இதன் அமைப்பு ஆணையாளராக செயற்படுகின்றார்.
மாவட்டத்தில் பொது மக்கள் மத்தியில் சாரணீயம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக 10.06.2016 மாலை 3.00 மணிக்கு வீதி நடை ஒன்றும் நடத்தப்பட உள்ளது.