கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள சர்ச்சையால் நாட்டில் தற்பொழுது, அரசியல் சதுரங்கம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. வட மாகாண சபையில் முன்னாள் ஜனாதிபதி ஆட்சிக்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாண ஆட்சியை கைப்பற்றி, பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி செய்து வருகின்றது.
ஆனாலும், அங்கு வெளிப்படையாகவே ஆளுநர் மாகாண அரசின் செயற்பாடுகளில் தலையிடுகின்றார் என குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அதன் பிரதிபலிப்பாக ஆளுநர் மாற்றம் இடம்பெற்றது. இருந்தாலும் இன்னமும் அங்கு ஆளுநரின் செல்வாக்கு குறையவில்லை.
இதே நிலை கிழக்கு மாகாணத்தில் நிகழ்ந்தாலும் இதுவரை ஆளுநரின் தலையீடுகளுக்கு எதிராக கிழக்கு மாகாண அரசோ அல்லது மாகாண முதலமைச்சரோ வெளிப்படையாக எந்தவிதமான கருத்துக்களையும் வெளியிட்டதில்லை.
ஆனால் அண்மையில் கடற்படையினரை கிழக்கு மாகாண முதலமைச்சர் திட்டினார் என்னும் விவகாரத்தோடு கிழக்கு மாகாண ஆளுநரின் தன்னிச்சையான செயற்பாடுகளை கவனித்து வந்துள்ள முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் மொஹமட் வெளிப்படையாகவே தன்னுடைய ஆதங்கத்தினை வெளியிட்டு வருகின்றார்.
ஏறாவூரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பேசிய அவர், சிரித்துக்கொண்டு அதி கொடூரமான ஆட்சியை செய்த ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோவைத் தட்டிக்கேட்க வேண்டிய தேவை தமக்கு இருந்ததாக தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,
முன்பிருந்த ஆளுநர் மொஹான் விஜயவிக்ரமவின் கொடூரமான ஆட்சி, மகிந்த ராஜபக்சவினுடைய கொடூரமான ஆட்சி, அதற்குள் சிறுபான்மை சமூகத்தினர் அடக்குமுறைக்குள் உட்படுத்தித்தான் ஆளப்படவேண்டும் என்று உருவாக்கப்பட்டுள்ள அந்த கட்டமைப்புக்குள் இருந்து கொண்டு இன்று வந்துள்ள ஆளுநரும், சிரித்துக்கொண்டு அதைவிட மோசமாக செய்கின்ற ஆளுநராக இருப்பதை நானும் சிரித்துக்கொண்டு இல்லை என்று கூற வேண்டும்.
மாகாணத்தில் பிரச்சினை இருக்கிறது. முன்னர் திஸாநாயக்க என்றொரு செயலாளர் இருந்தார். எந்தவொரு மாகாணத்திலும், இல்லாத ஒரு விடையம் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு பொதுவான ஒரு பணி.
அந்தப்பணிக்கு செயலாளராக இருக்கின்ற ஒருவரை எவ்வாறு நீங்கள் கல்வியமைச்சுக்கு செயலாளராக்க முடியும் என்று பகிரங்கமாக நான் அவரிடம் கேட்டேன்.
இது தொடர்பாக அறைக்குள் வைத்தும் கேட்டுப்பார்த்தேன். அதற்கு சரிவரவில்லை. வீதியில் வைத்து கேட்கும் நிலை வந்தது.
ஆகவே இவ்வாறு சிரித்துக்கொண்டு கொடூரமான ஆட்சியை செய்கின்ற ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோவைத் தட்டிக்கேட்க வேண்டிய தேவை எமக்கு அப்போது இருந்தது என்றார்.