ஹாசிப் யாஸீன், எம்.வை.அமீர், எம்.எம்.ஜபீர்-
அகர ஆயுதம் ஏற்பாட்டில் பிரபல கவிஞரும், திரைப்பட இயக்குனரும், எழுத்தாளருமான சாய்ந்தமருது எஸ்.ஜனுாஸ் எழுதிய “மூசாப்பும் ஒரு முழ வெயிலும்“ கவிதை நுால் அறிமுகவிழா கடந்த ஞயாயிறு (12) மாலை 04 மணிக்கு சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் கவிஞர் பாலமுனை பாரூக் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களுடன் கெளரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நஸீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன், ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
முன்னிலை விருந்தினராக மூத்த எழுத்தாளர் மருதமாமணி அலியார் பீர் முகம்மட் மற்றும் முதல் பிரதி பெறுபவராக ஏ.எல் அன்வர்தீன் முகாமையாளர் ஹபிப் வங்கியும் கலந்து கொண்ட அதேவேளை வைத்தியர்கள் கலைஞர்கள் ஊடகவியலாளர்கள் அரசியல் பிரமுகர்கள் வர்த்தகர்கள் என மண்டபம் நிறைந்த ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.
விழாவின் தொடக்கத்தில் வரவேற்புரையை இலக்கியச் செயற்பாட்டாளர் எம்.ஐ.எம்..நாளிரும், தலைமையுரையை பாலமுனை பாரூக்கும், அறிமுகத்தை அகர ஆயுதத்தின் தலைமை செயற்பாட்ட்டாளர் இலக்கியன் முர்ஷித்தும் நிகழ்த்தினர்.
மூசாப்பும் ஒரு முழ வெயிலும் நூல் பற்றி கருத்துரைகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அறிவிப்பாளர்களான கவிஞர் ஏயெம்.தாஜ், கவிஞர் எஸ்.றபீக் மற்றும் இலக்கிய விமர்சகர் ஜெஸ்மி எம்.மூஸா ஆகியோர் நிகழ்த்தியதுடன் கவிவாழ்த்துக்களை மூத்த கல்விமான் அலியார் பீர் முஹம்மது, எழு கவி ஜெலீல், கிராமத்தான் கலீபா ஆகியோர் செய்தனர்.
சிரேஷ்ட பாடகர் கலாபூஷணம் ஏ.எம்.முஸ்தபா பாடலிசைத்தார். நிகழ்ச்சியின் தலைமை ஒருங்கிணைப்பை கலை இலக்கிய செயற்பாட்டாளர் எஸ்.எம்.அமீர் மேற்கொள்ள இ.ஒ.கூ.பிறை எப்.எம். அறிவிப்பாளர் ஜே.சியாவுல் ஹக் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார்.
கவிஞர் ஜனூஸ் எழுதிய இக்கவிதை நுால் முதற்கட்டமாக கடந்த ஜனவரியில் கொழும்பிலும், இரண்டாம் கட்டமாக பெப்ரவரியில் இந்தியாவிலும் வெளியானது குறிப்பிடத்தக்கது.
























