ஏரூர் அஸ்மி-
கணக்காய்வாளர் தலைமை அதிபதி திணைக்களத்தின் -கணக்காய்வு அத்தியட்சகராக (Superintendent Of Audit) மட்டக்களப்பு - காத்தான்குடியை சேர்ந்த அசனார் முகம்மது மாஹிர் நியமனம் பெற்றுள்ளார் - கடந்த 2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இலங்கை கணக்காய்வு சேவையின் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலாவது இடத்தை பெற்று சித்தி அடைந்ததனைத் தொடர்ந்து இன்று (மார்ச் 01) முதல் கொழும்பு பத்தரமுல்லையில் உள்ள கணக்காய்வாளர் தலைமை அதிபதி அலுவலகத்தில் கணக்காய்வு அத்தியட்சகராக உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை இனங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் தோற்றிய இந்த பரீட்சையில் இவரின் அதீத திறமையாலும், முயற்சியாலும் ஆர்ப்பாட்டம் இல்லாத குனாதிசயங்களாலும் அகில இலங்கை ரீதியில் முதலாவது நபராக சித்தி அடைந்து முழு சமூகத்துக்கும் பெருமை ஈட்டிக் கொடுத்துள்ளார்.
இவர் 1999ம் ஆண்டில் இருந்து கணக்காய்வாளர் தலைமை அதிபதித் திணைக்களத்தின் சிரேஷ்ட கணக்காய்வு பரீட்சகராக கடமையாற்றி வந்துள்ளார்.
தனது முதல் பட்டத்தை பேராதனை பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றுக் கொண்ட இவர் அபிவிருத்திப் பொருளியலில் முதுமாணிப் பட்டப்பின்படிப்பை ஆங்கில மொழி மூலம் மேற்கொண்டு அதி விசேட சித்தியை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றுக் கொண்டார்.
தென்கிழக்கு மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களில் முறையே ஆங்கில மொழி டிப்ளோமா மற்றும் உயர்தர ஆங்கில மொழிச் சான்றிதழ் பட்டங்களையும் இவர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இலங்கை கணக்கீட்டு தொழில்நுட்பவியலாளர் கழகம் மற்றும் சான்றுப்படுத்திய தொழில்சார் முகாமையாளர் நிறுவனங்களின் உறுப்பினராகவும் இவர் பணியாற்றுகின்றார்.
இவர் மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த மர்ஹூம் அஸனார் ஆசிரியர் மற்றும் ஹாஜியானி முஹம்மது நாச்சி அவர்களின் கனிஷ்ட புதல்வராவார். மெத்தைப்பள்ளி, ஹிழுறியா வித்தியாலயம் மற்றும் காத்தான்குடி மத்திய கல்லூரியின் பழைய மாணவருமாவார்
