சட்டவிரோதமான முறையில் முன்னாள் சுயாதீன தொலைக்காட்சியின் தலைவர் அனுர சிறிவர்தன வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார் என பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணைக் குழுவினால் கண்டறியப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பயணங்களின் போது அரசாங்க அதிகாரியொருவர் பின்பற்ற வேண்டிய நியதிகளை பின்பற்றாது கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 9ம் திகதி அனுர சிறிவர்தன சிங்கப்பூர் பயணம் செய்துள்ளார்.
ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.
சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் ஆணைக்குழு கடந்த சில நாட்களாக செய்து வரும் விசாரணைகளின் போது சட்டத்தரணி ஹேமந்த கர்திஹேவா எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது, தாம் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டதாக அனுர சிறிவர்தன ஒப்புக்கொண்டார்.
அப்போதைய ஜனாதிபதி செயலாளரிடம் வாய் மொழி மூலமாக வெளிநாட்டு பயணம் குறித்து அறிவித்து வெளிநாட்டு பயணம் மேற்கொண்டதாகவும், இதற்காக எழுத்து மூலம் எவ்வித ஆவணமும் இல்லை என ஆணைக்குழுவின் தலைவர் நீதவான் பத்மன் சூரசேன எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது, அனுர சிறிவர்தன மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்த மோசடி குறித்த விசாரணைகளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த கடந்த இரண்டு நாட்களிலும் முன்னிலையாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
