நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட 7 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார்.
இதன்படி குறித்த அனைவரையும் எதிர்வரும் 18ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பொது மக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்து கறுவாத்தோட்டம் பொலிஸார் பதிவு செய்துள்ள முறைப்பாட்டிற்கு அமைய நீதி மன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் ராத் அல் ஹூசைன் கடந்த 6ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.
அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விமல் வீரவன்ச தலைமையிலான குழுவினர் கொழும்பில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அனுமதியின்றி ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தியதாகவும் அதன் ஊடாக பொதுமக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியதாகவும் குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வீதிச்சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கக்கூடிய குற்றமிழைக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜயந்த சமரவீர, வீரகுமார திஸாநாயக்க, பியசிறி விஜேநாயக்க, மொஹமட் முஸம்மில், ரொஜர் செனவிரத்ன, டொன் லிசுயா உள்ளிட்டவர்களை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
