தான் யானை பிடிக்கவில்லை என்றும், யானை பிடிப்பதற்காக காட்டிற்கு செல்லவில்லை என்றும், யானை விற்பனையில் ஈடுபடவில்லை என்றும், அதற்காக போலி உறுதிகள் தயாரிக்கவில்லை என்றும் உடுவே தம்மாலோக தேரர் தெரிவித்துள்ளார்.
தன் மீது இவ்வாறான குற்றச்சாட்டு இருப்பதை தான் அறிந்து கொண்டது இணையத்தளங்கள் மற்றும் பத்திரிகை செய்திகளினூடாகவே என நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதனடிப்படையில் இரகசியப் பொலிஸார் தன்னிடம் இரண்டு தடவைகள் வாக்குமூலம் பெற்றுக் கொண்டதாகவும் தனக்கு தெரிந்த அனைத்தையும் அதன்போது தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
20-30 யானைக் குட்டிகளுடன் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் இந்த யானைக் குட்டியை விகாரையில் விட்டுச் சென்றுள்ளதாகவும், தான் அனுதாபபட்டு அதற்கு உணவு பானங்களை வழங்கி கவனித்து வந்ததாகவும் தவறிழைத்திருந்தால் தன்னை கைது செய்யுமாறும், தான் சட்டத்தை மதிக்கக் கூடியவர் என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் தனது சட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு தன்னிடம் நிதி வசதி இல்லாமையினால் தன்னிடம் மத போதனைகளை கேட்டுள்ளவர்கள் தனக்கு 10 ரூபா படி நிதியுதவி வழங்குமாறும் அவர் இதன்போது வேண்டுகோள் விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
