எப்.முபாரக்-
தந்தை வயற்காவலுக்கு சென்றிருந்த தருணத்தை பயன்படுத்தி, அவருடைய வீட்டையே உடைத்து தொலைக்காட்சியை கொள்ளையிட்டுச்சென்ற அவருடைய மகன், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பவமொன்று செவ்வாய் கிழமை(5) திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தந்தை, திருகோணமலை, ரொட்டவெவப் பிரதேசத்திலும், திருமணம் முடித்து பிள்ளையொன்றுக்கு தந்தையான அவருடைய மகன், ஹொரவப்பொத்தான பகுதியிலும் வசித்துவந்துள்ளனர்.
வயலுக்கு காவல் காப்பது தந்தையின் தொழிலாகும். இவ்வாறு ஒருநாள் காவற்கடமையை முடித்துக்கொண்டு, வீட்டுக்கு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து மிகப்பெறுமதியான பொருட்கள் அந்தந்த இடத்திலேயே இருந்துள்ளன. எனினும், தொலைக்காட்சிப் பெட்டியை மட்டும் காணவில்லை.
இதுதொடர்பில், வீட்டின் உரிமையாளர், மொரவௌ பொலிஸில் முறையிட்டுள்ளார். பொலிஸார் மோப்ப நாய்க் கொண்டு விசாரணைகளை துரித்தப்படுத்தினர். அங்கிருந்த அந்நாய், 15 கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள ஹொரவப்பொத்தானைக்கு சென்று, அவரது மகனின் வீட்டுக்குள்ளே நுழைந்துள்ளது.
குற்றத்தை ஒத்துக்கொண்ட மகன், தனது மகள் தொலைக்காட்சிப் பெட்டி வேண்டுமென்று அழுதமையால், இவ்வாறு வீட்டை உடைத்து கொள்ளையிட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் அந்நபரை, பொலிஸார், இன்று செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தினர். நீதவான் கயான் மீகஹகே, அவரை, எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
