முன்னாள் ரக்பி வீரர் வாஸிம் தாஜூதீனின் கொலை தொடர்பிலான விசாரணையில் முக்கியகட்டம் எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாஸிம் தாஜூதீனின் கொலைக்கு பின்னால் அரசியல் இருப்பதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சிரேஸ்ட போக்குவரத்து அலுவலராக செயற்பட்டு வந்த கெப்டன் திஸ்ஸ விமலசேன கைதுசெய்யப்பட்டு தற்போது யாழ்ப்பாண இராணுவ முகாம் ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் குறித்த கெப்டன் விமலசேன, தாஜூதீன் கொலை மாத்திரமல்லாமல் ஏனைய பல கொலைகள் மற்றும் தாக்குதல் சம்பவங்களிலும் தொடர்புப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதேவேளை, இராணுவத்தில் பணியாற்றுகின்றபோது எவராவது குற்றங்களில் ஈடுபட்டதாக தெரியவந்தால் அதனை ஏற்றுக்கொள்ளமுடியாது. அவர்களை மன்னிக்கமுடியாது. எனவே அவர்களுக்கு எதிராக இராணுவ சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணுவ தளபதி கிரிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சம்பவங்களினால் இராணுவத்தின் பெயருக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
