செயிட் ஆஷிப்-
2002ஆம் ஆண்டு செனட்டர் மசூர் மௌலானா ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்திருக்கவில்லை என்றால் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று முஸ்லிம் காங்கிரசின் தலைவராக இருந்திருக்க முடியாது என அக்கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
ஏறாவூர் வாவிக்கரையோர சிறுவர் பூங்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற செனட்டர் மசூர் மௌலானாவின் நினைவுப் பேருரை நிகழ்வில் பிரதான பேச்சாளராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஏறாவூர் அஷ்ரப் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் முஹைதீன் பாவா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது;
"செனட்டர் மசூர் மௌலானா மருதமுனை மண்ணுக்கு மட்டும் உரித்தான சொத்தல்ல. அவர் முழு இலங்கை முஸ்லிம் தேசியத்திற்கும் சொந்தமான ஒரு முதுசமாகும். அதனால் தான் மருதமுனையையும் கொழும்பையும் கடந்து எமது ஏரவூரிலும் அவரை நினைந்து பேசுவதற்கு நாம் விரும்பினோம்.
1977 ஆம் ஆண்டில் எமது மண்ணில் பரீத் மீராலெப்பை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது அவர் வீட்டிலிருந்து வெளியேற முடியாமல் முடக்கப்பட்டிருந்தார். அப்போது மசூர் மௌலானா மிகவும் துணிச்சலுடன் ஏறாவூரில் களமிறங்கி, பிரசாரத்தில் ஈடுபட்டு பரீத் மீராலெப்பையின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.
அவர் தமிழ்- முஸ்லிம் ஐக்கியத்தின் அடிநாதமாகத் திகழ்ந்த ஓர் அரசியல் தலைவர். இந்த சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்காக தமிழ் தேசியத் தலைமைகளுடன் இணைந்து பல போராட்டங்களை முன்னெடுத்து, அதற்காக இரத்தம் சிந்தி சிறைவாசமும் அனுபவித்திருந்தார்.
செனட்டர் மசூர் மௌலானாவுக்கும் எனக்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. தமிழ் தேசியத்திற்காக அவர் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அதே விடயத்திற்காக நான் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தேன். அவரும் நானும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் ஒரே நாளில் சேர்ந்து, ஒரே பதவியை வகித்திருந்தோம்.
நான் 1994ஆம் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் முதன்முறையாகப் போட்டியிட்டபோது தேர்தல் பிரச்சாரப் பணிகளில் நான் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தேன். அப்போது மசூர் மௌலானா இங்கு வந்து எனக்காகப் பிரசாரம் செய்தார்.
அதனால் அவருக்கும் எனக்கும் நெருக்கமான உறவு இருந்து வந்தது. அவர் பற்றி என்னால் நிறையப் பேச முடியும். ஆனால் இன்று நான் ஒரு முக்கிய ரகசியத்தை வெளியிடப் போகின்றேன். அந்த ரகசியம் என்னையும் மசூர் மௌலானாவையும் தவிர வேறு எவருக்கும் இதுவரை தெரிந்திராத இரகசியமாகும்.
அதாவது 2002 ஆம் ஆண்டு அரசு- புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக எமது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஒஸ்லோவுக்கு சென்றிருந்தவேளை எமது கட்சியின் தவிசாளராகவிருந்த முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ், கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து ரவூப் ஹக்கீமை அகற்றுவதற்கு சதிப் புரட்சி ஒன்றை அரங்கேற்ற முற்பட்டார்.
பேரியல் அஷ்ரப் தலைமையில் கட்சி பிளவுபட்ட போதோ, ரிசாத் பதியுதீன் தலைமையில் பிளவு ஏற்பட்ட போதோ அல்லது வேறு சில சந்தர்ப்பங்களில் உருவான நெருக்கடிகளின் போதோ இல்லாதளவுக்கு பாரதூரமான ஒரு விடயமாக அதாவுல்லாவின் திட்டம் அமைந்திருந்தது.
அதற்கான அத்தனை வேலைகளையும் கனகச்சிதமாக அதாவுல்லா மேற்கொண்டிருந்தார். அப்போதைய செயலாளர் டாக்டர் ஹப்ரத்தைக் கொண்டு கட்சியின் அதியுயர் பீடத்தைக் கூட்டுவதற்கான அழைப்பை உத்தியோகபூர்வமாக விடுத்திருந்தார். அதியுயர் பீட உறுப்பினர்களுள் பெரும்பாலானோர் அதாவுல்லாவின் பக்கம் சாய்ந்திருந்தனர். அவரிடம் சட்டப்படி கூட்டம் நடத்துவதற்கான கோரம் இருந்தது. அன்றிரவு அதாவுல்லா திட்டமிட்டிருந்தபடி கூட்டம் நடந்திருந்தால் கட்சி யாப்பின் பிரகாரம் ரவூப் ஹக்கீமின் தலைமைப் பதவி நிச்சயம் பறிபோயிருக்கும்.
ஆனால் அந்த சதியை முறியடிப்பதற்கு காரணமாக இருந்தவர் செனட்டர் மசூர் மௌலானா எனும் ரகசியத்தை நான் இன்று அம்பலப்படுத்துகின்றேன். அன்று அதிகாலை என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவர் இந்த சதித் திட்டம் பற்றி எனக்கு விபரித்தார். அவர் சொன்ன தகவல் எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
உடனே நான் ராணுவப் பாணியில் களமிறங்கினேன். எனது துப்பாக்கியை எடுத்துக் கொண்டு இரண்டு இளம் எம்.பி.க்களை என்னுடன் சேர்த்துக் கொண்டேன். புத்தளம் கே.ஏ.பாயிஸுடன் தொடர்பு கொண்டேன். கூட்டம் நடைபெறவுள்ள தாருஸ்ஸலாமுக்கு நூறு பேரை திரட்டிக் கொண்டு வருமாறு அவரிடம் கூறினேன். அவர் பஸ்களில் ஆட்களை கொண்டு வந்து இறக்கினார்.
அன்று இரவு கூட்டம் நடத்துவதற்காக அதாவுல்லாவும் அவருக்கு ஆதரவான அதியுயர் பீட உறுப்பினர்களும் வந்திறங்கிய போது அவர்கள் மீது கல்லெறி பொழியப்பட்டது. அதாவுல்லாஹ் நிலைகுலைந்து ஓட்டமெடுத்தார். பின்னர் நாமே அந்தக் கூட்டத்தை நடத்தி முடித்தோம்.
இப்படியொரு சதி நடக்கிறது என்று மசூர் மௌலானா எனக்கு தெரியப்படுத்தியிருக்கா விட்டால் எம்மால் இந்த சதியை முறியடித்திருக்க முடியாது. ரவூப் ஹக்கீமின் தலைமைப் பதவியை காப்பாற்றியிருக்கவும் முடியாது. செனட்டர் மசூர் மௌலானாவின் இதயத்தில் ரவூப் ஹக்கீம் இருந்தார். அதனால் ரவூப் ஹக்கீம் மு.கா.வின் தலைவராக நீடிக்கிறார்" என்று பஷீர் சேகுதாவூத் குறிப்பிட்டார்.
