பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்தில் தரம் 10 வைக்கக்கோரி இன்று பாடசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றது.
PEDS என்ற சமூக சேவை அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்வார்பாட்டத்தில் பிள்ளைகளின் பெற்றோர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் என பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
நீண்ட காலமாக பல அரசியல் வாதிகளால் தரம் 10 வைப்பதாக பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டும் இன்னும் அது நிறைவேற்றப்படாமலே உள்ளது.
குறித்த பாடசாலையில் தரம் 10 இல்லாத காரணத்தால் பல பிள்ளைகளின் கல்வி தடைப்பட்டு அவர்களின் எதிர் காலமானது கேள்விக்குறியாகவே உள்ளது.
வேறு பாடசாலைக்குச் செல்வதென்றால் சுமார் 3 கிலோ மீற்றர் தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளதனால் பல திறமைமிக்க பெண் பிள்ளைகளின் கல்வியானது துரதிஸ்ட வசமாக பாதிப்படைந்துவருகிறது.
அதிகமாக மீனவர்களின் பிள்ளைகளே இப்பாடசாலையில் பயில்வதனால் வேண்டுமென்றே சில விசமிகளால் புறக்கணிக்கப்பட்டுவருகின்றது. இவ்விடயத்தில் வலயக்கல்விப் பணிமனையின் செயற்பாடுகளும் வருந்தத்தக்க வகையிலேயே உள்ளது.
எனவே உரிய அதிகாரிகள் மாணவர்களின் அத்தியாவசிய தேவையை உடனடியாக நிறைவேற்றி தருமாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் ,பெற்றோர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

