ஒரு வெளிநாட்டுப் பிரஜையிடம் கட்டார் அரசு அங்கீகரிக்கும் ஒரு நாட்டின் சாரதி அனுமதிப் பத்திரம் இருக்குமென்றால் அதைக் கொடுத்து கட்டார் சாரதி அனுமதிப் பத்திரத்துக்கு அதை மாற்றிக் கொள்ள முடியும்.
ஆனால் இந்த வாய்ப்பை கட்டார் அரசு ரத்து செய்துள்ளது. அந்த சட்டத்தையே மாற்றிய பெருமை ஒரு இலங்கை பிரஜையை சாரும்.
கட்டார் மாதிரி முழுமையாக இலத்திரனியல் அடிப்படையில் அரச சக்கரம் சுழலும் ஒரு நாட்டில் சவுதி அரேபியாவில் தயாரித்த சாரதிஅனுமதிப் பத்திரங்களைக் கொண்டு வந்து அதை கட்டார் சாரதி அனுமதிப் பத்திரமாக மாற்றி பணம் சம்பாதிக்கும் ஒரு உத்தியைப் பல மாதங்களாக நம்மவர் ஒருவர் கையாண்டு வந்திருக்கிறார்.
ஒரு சாரதி அனுமதிப் பத்திரத்தினை செய்து கொடுக்க பல இலட்சங்கள் பெற்றும் இருக்கிறார்.
ஒரு வெளிநாட்டு சாரதி அனுமதிப் பத்திரத்தை மாற்றுவதற்கு (200 - 250 ) ரியால் கட்டார் அரசுக்கு செலுத்த வேண்டும்.
அதை செலுத்துவதற்கும் இந்த ஆசாமி ஒரு கட்டார் பிரஜையின் கடன் அட்டையை களவாக பயன்படுத்தி இருக்கிறார். அங்கே தான் அவருடைய திருகுதாளம் பிடிபட்டது.
ஒரு அரச அலுவலகத்துக்கு அடிக்கடி தனது கடன் அட்டை மூலம் பணம் செலுத்தப்பட்டுள்ளதை அவதானித்த அந்த கட்டார் பிரஜை அடுத்த முறை வந்தால் அவரைக் கைது செய்யுமாறு பொலிசாரிடம் கூறியிருக்கிறார்.
ஆசாமி தற்பொழுது சிறையில் இருக்கிறார்
இந்த புண்ணியவான் செய்த வேலையினால் மத்திய கிழக்கு நாடுகளின் பிரஜைகளைத் தவிர்ந்த யாருக்கும் இனி சாரதி அனுமதிப் பத்திரத்தை கட்டார் சாரதி அனுமதிப் பத்திரமாக மாற்றீடு செய்ய முடியாது.
இந்த சட்டம் நிறைய வெளிநாட்டவர்களை வெகுவாக பாதிக்கும் என்பதில் ஐயமில்லை.
