ஐஸ் பக்கெட் சேலஞ்ச் என்று கடந்த வருடம் இணையத்தை கலக்கிய ஒரு போட்டியை போல, ஆணுறை சேலஞ்ச் என்ற பெயரில் ஆணுறையில் தண்ணீரை நிரப்பி தலைமீது போடும் விளையாட்டை இணையவாசிகள் ஆரம்பித்துள்ளனர்.
வெளிநாடுகளில் தற்போது இது பரபரப்பாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
ஐஸ் போல குளிரும் நீர் நிரம்பிய பக்கெட்டை தலையில் ஊற்றிக்கொள்வது ஐஸ் பக்கெட் சேலஞ்ச் என்ற பெயரில் ஒரு விளையாட்டாக கடந்த வருடத்தில் மிகுந்த பிரபலமாக பேசப்பட்டது. இதில் சேரும் நிதி, அறக்கட்டளைக்கு கொடுக்கப்பட்டதால் அதில் ஒரு நியாயம் கற்பிக்கப்பட்டது.
இந்த ஆட்டத்தின் பெயர், 'காண்டம் சேலஞ்ச்'. தமிழில் சொல்ல வேண்டுமெனில், 'ஆணுறை சவால்'. அது என்ன ஆணுறை சவால்.. ஆணுறை அணிந்து ஏதேனும் சவாலில் ஜெயிக்க வேண்டுமா.. பெயரை கேட்டால் கொஞ்சம் கிளுகிளுப்பாக இருக்கிறதே என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.
ஆணுறையில் நீரை நிரப்பி தலைமீது போட்டுக்கொள்வதுதான் காண்டம் சேலஞ்ச். இந்த கொடுமையான நிகழ்வு ஏன் இவ்வளவு பிரபலமாகிவருகிறது என்பது புரியாத புதிர்.
ஆணுறை சவாலை நடத்துவோர், அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் வைத்துள்ளனர். அதிலும், இந்த கேம் ஆடினால், யாருக்காவது நன்மை கிடைக்கிறதா, இல்லையா என்பது போன்ற எந்த ஒரு தகவலும் இல்லை.
ஆணுறை சவாலை வெறும் வேடிக்கை என்ற அளவில், செய்துகொள்வதில் தப்பில்லை. ஆனால் இதில் விபரீதம் உள்ளது. ஆணுறையில் ஏகப்பட்ட நீரை நிரப்பி தலையில்போடும்போது, அது உடைகிறது.
உடைந்ததும், ஆணுறை பாகங்கள், மூக்கு, வாயை முழுமையாக அடைக்கிறது. உடனடியாக யாராவது அதை நீக்காவிட்டால், மூச்சு திணறி அந்த நபர் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.