க.கிஷாந்தன்-
2016 வரவு செலவு திட்டத்தில் அதிகப்படியான நிதி மலையக அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகமலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட மஸ்கெலியா சாமிமலை கவரவில் தமிழ் மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்ந விழாவில் பாடசாலையின் அதிபர் மூ.மூவேந்தர், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், ஆர்.இராஜாராம் மற்றும் அட்டன் வலய கல்வி பணிப்பாளர் எஸ்.பி.இராஜாசேகரன் ஆகியோருடன் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்;
பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட வரவு செலவு திட்டத்தில் மலையக மக்களுடைய வீட்டு பிரச்சினையை தீர்க்கும் வகையில் அதிகளவிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் மலையகத்தில் வீடு இல்லாதவர்களுக்கு வீடுகள் நிர்மாணிப்பதற்கு ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டப்படவுள்ளதோடு தோட்டங்களை கிராமமாக்கும் செயல்திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளது. மேலும் வரவு செலவு திட்டத்தில் கல்விக்கும் கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 5 வருட காலப்பகுதியில் விளையாட்டு துறையை மேம்படுத்தும் வகையில் பொது விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும். அத்தோடு பல்வேறுப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளும் அமைக்கப்படும்.
கடந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் 400 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது. அதேபோல் மக்களின் பிரச்சினைகளை இணங்கண்டு தீர்த்து வைக்கும் வகையில் செயற்படுவேன்.
அத்தோடு இம்முறை வரவு செலவு திட்டத்தில் தனது அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியினை முழுமையாக மலையக மக்களின் அபிவிருத்தியை முன்னேடுப்பதற்காக பயன்படுத்தவுள்ளதாகவும் இதற்கு யாராவது இடையூறுகள் செய்ய முற்பட்டால் அதற்கு தகுந்த பாடம் புகட்டுவேனும் என்று கூறினார்.