கோட்டே ஸ்ரீ நாக விஹாரையின் விஹாராதிபதி மாதுலுவாவே சோபித தேரர் இன்று அதிகாலை காலமானார்.
சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சோபித தேரர் இன்று அதிகாலை காலமானதாக கோட்டே ஸ்ரீ நாகவிஹாரை நிர்வாகம் அறிவித்துள்ளது.
சோபித தேரர் ஊழல்களுக்கு எதிராக தேசிய அமைப்பின் அழைப்பாளராகவும் கடமையாற்றியிருந்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தினை ஆட்சி பீடம் ஏற்றுவதிலும் சோபித தேரர் முக்கிய பங்காற்றிவந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த சோபித தேரர் அண்மையில் சிங்கப்பூரில் சிகிச்சைகளுக்காக சென்றிருந்தார்.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தை பதவி கவிழ்க்கும் நோக்கில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் இணைந்து முன்னின்று உழைத்தன் மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதில் கதாநாயகனாக மறைந்த மாதுலுவாவே சோபித தேரர் விளங்கியமை குறிப்பிடத்தக்கது.
சோபித தேரரின் இறுதிக் கிரியை வியாழக்கிழமை
இறையடி எய்திய மாதுலுவாவே சோபித தேரரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்னாரது பூதவுடல் இன்றிரவு 9.15 மணியளவில் நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதையடுத்து, கொழும்பு பொரள்ளையிலுள்ள ஜயரட்ன சாலைக்கு கொண்டு வரப்படுவதுடன், நாளை அன்னாரது பூதவுடல் கோட்டே ஸ்ரீ நாக விஹாரைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
கோட்டே ஸ்ரீ நாக விஹாரையில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் அன்னாரது பூதவுடல் எதிர்வரும் வியாழக்கிழமை பாராளுமன்ற மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அரச மரியாதைகளுடன் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
12ம் திகதி தேசிய துக்க தினம்
எதிர்வரும் 12ம் திகதியை தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இயற்கை எய்திய நாக விகாரையின் விஹாராதிபதியும் சமூக நிதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவருமான மாதுலுவ சோபித்த தேரரின் இறுதிக் கிரியைகள் அன்றைய தினம் நடைபெறவுள்ளமையை முன்னிட்டு இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


