யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியினுள் இடம்பெற்ற 16 கொலை சம்பவங்கள் தொடர்பில் ஆராய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால், 2006இல் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு மற்றும் காணாமல் போனோர் தொடர்பாக ஆராய 2013இல் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கைகளை நாடாளுமன்றில் முன்வைக்க அரசாங்கம் தயாராகியுள்ளது.
முதலாவது விசேட ஜனாதிபதி ஆணைக்குழு உதலாகம என்ற பெயரிலும், இரண்டாவது ஆணைக்குழு மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு என்ற பெயரிலும் பிரசித்தமானது.
உதலாகம ஆணைக்குழு அறிக்கை கடந்த 2009ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டிருந்த போதிலும், அது வெளியிடப்படவில்லை.
காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தயாரிக்கப்பட்டு நிறைவடைந்த நிலையில், அதனை தற்போதைய ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கான தினம் ஒன்றை கோரியிருப்பதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் நிசங்க உதலாகம தலைமைத்துவம் வகித்த முதலாவது ஆணைக்குழு 16 கொலைகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கான பொறுப்பை ஏற்றது.
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை, மூதூரில் இடம்பெற்ற 17 நிவாரண பணியாளர்களின் கொலை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை, கெப்பெற்றிகொல்லாவ 68 சாதாரண பொதுமக்கள் கொலை, திகம்பத்தன பாதுகாப்பு பிரிவின் 98 பேரது கொலை என்பன அதில் அடங்குகின்றன.
எவ்வாறாயினும், நிதி வழங்கல் உரிய வகையில் வழங்கப்படாமை, சாட்சியாளர்கள் மற்றும் விசாரணைகளுடன் தொடர்பு கொண்டவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படாமை தொடர்பாக அரசாங்கம் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
பின்னர், மனித உரிமை செயற்பாட்டு நிறுவனங்கள் சில இது தொடர்பான விசாரணைகளில் தலையீடு செய்ய அனுமதி கோரியிருந்தன.
எனினும் அது சாத்தியப்படாத நிலையில், அந்த கோரிக்கையை அரச சார்பற்ற நிறுவனங்கள் விலக்கிக்கொண்டன.
இதேவேளை, இறுதி யுத்தத்தின் போது சர்வதேச மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதா? என்பது தொடர்பில் ஆராயும் பொறுப்பு கடந்த 2013ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில், தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
