உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தனியான அணியொன்றை நிறுத்த தயாராகி வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணியை முடிவுக்கு கொண்டு வரவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஏனைய கட்சிகள், தனியாக கூட்டணியாக இணைந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட திட்டம் வகுத்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி இந்த கூட்டணியின் தலைமை மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்படக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த கூட்டணியை உருவாக்கும் முயற்சியில், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச முக்கிய பங்காற்றி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
335 உள்ளூராட்சி சபைகளுக்கு எதிர்வரும் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இவற்றில் 301 சபைகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்டுப்பாட்டில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.