ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் வேட்பு மனு வழங்குவது தொடர்பாக இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என்று சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு இன்று இடம்பெற்றபோது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வேட்பு மனு வழங்கப்பட்டுள்ளதா என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் வேட்பு மனு வழங்கப்படமாட்டாது என அண்மையில் நீங்கள் கூறியிருந்தீர்கள். இது பொய்யாகிவிட்டதே என அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், நான் ஒருபோதும் பொய் கூறவில்லை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிடம் கூறியவற்றையே தான் கூறியதாக அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் யாருக்கு வேட்பு மனு வழங்குவது என்பது தொடர்பாக ஜனாதிபதியே இறுதி முடிவெடுப்பார் எனவும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.
இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக மஹிந்த ராஜபக்ஷ வேட்பு மனுவில் கையெழுத்திட்டுள்ளதாகவும் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாகவும் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது விமல் வீரவன்ச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
