பொத்துவில் செய்தியாளர் எம்.ஏ. தாஜகான்
அரசியல் அநாதையான நிலையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் பொத்துவிலின் அரசியல் இருப்பை பாதுகாப்பதற்கும் பிரதிநிதித்துவம் வழங்குவதற்கும் ஐக்கிய தேசிய கட்சியின் சிறிகொத்தா முன்வந்துள்ளமை பாராட்டத்தக்க தொன்றாகும். என முன்னாள் ஐக்கிய தேசிய கட்சியின் பொத்துவில் பிரதேச சபையின் உறுப்பினர் அல்ஹாஜ் மௌலவி ஏ. முகைதீன் பாவா தெரிவித்தார்.
திகாமடுல்ல தேர்தல் களத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக கரையோர மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் முன்னாள் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.அப்துல் மஜித் அவர்களை பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு வழங்குவதற்கான முடிவினை சிறிகொத்தா அரசியல் வட்டாரம் நேற்று (8) எடுத்துள்ளது. இம்முடிவினை ஆதரித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பொழுதே தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்;
முன்னாள் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.அப்துல் மஜித் அவர்கள் பொத்துவில் பிரதேசத்திற்கு மாத்திரமன்றி அம்பாரை மாவட்டத்தில் மூவினங்களையும் ஒன்று சேர்த்து தலைமைத்துவத்தின் வழியில் கொண்டு செல்லக்கூடியவர். இத்தகைய ஒருவரை இம்முறை பொதுத்தேர்தல் வேட்பாளராய் நிறுத்தியமை குறித்து சிறிகொத்தாவிற்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.
பொத்துவில் இளைஞர்கள், புத்திஜீவிகள் சரியான தலைமைத்துவமின்றி பல்வேறு நெருக்குதலில் சிக்குண்டு தவித்துக் கொண்டிருக்கும் பொத்துவிலின் மூவின அபிவிருத்திக்கும், சுபீட்சத்திற்கும் வித்திடுவதற்காக இம்முறை எம்.அப்துல் மஜித் அவர்களை ஆதரிப்பது எமது தலையாய கடமையாகும். அதற்காக ஒன்றுபட உங்களை அழைக்கின்றோம்.
கடந்த 100 நாள் திட்டத்தில் பொத்துவிலுக்கான கல்வி, சுகாதாரம், போக்குவரத்து என்பனபற்றிய திட்டங்களை பிரதமர் ரணிலிடம் முன்வைத்திருந்தவர் எம்.அப்துல் மஜித் அவர்கள் எனவே அவர்களின் இருப்பை மேலும் உயர்த்துவதற்காகவும், பாராளுமன்ற உறுப்பினராய் பொருத்தமானவரை தெரிவு செய்வதற்காகவும் வேண்டிய கட்டாயத்தில் பொத்துவில் மக்கள் இருக்கின்றனர். எனவே இத்தேர்தலில் ஒன்று படுவோம் வாருங்கள் என அழைப்பு விடுத்தார்.
