றியாஸ் ஆதம்-
அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயத்தில் பல வருடகாலமாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருவதாகவும் இதனால் தங்களின் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்பட்டு வருதாகவும் பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
க.பொ.த உயர்தரம் கலைப்பிரிவுடன் இயங்கி வரும் 1சீ தரமுடைய இப்பாடசாலையில் சுமார் 1000 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர் தற்போது இப்பாடசாலையில் 46 ஆசிரியர்கள் தேவையாக இருந்தும் 41 ஆசிரியர்களே உள்ளனர். இவ்வாறானதொரு நிலை பல வருடங்களாக காணப்பட்டு வருவதாகவும் குறிப்பாக இப்பாடசாலையில் ஆரம்பபிரிவிற்கு 15ஆசிரியர்கள் தேவையாக இருந்தும் 10 ஆசிரியர்களே உள்ளதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது கட்டாய லீவிலிருக்கும் ஆசிரியர்களுக்கும் பதிலொழுங்குகளும் செய்யப்படாததனால் சுமார்; ஐந்து வகுப்புக்களுக்கு ஆசிரியர்கள் இல்லாததொரு துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதுடன்; ஆரம்பப் பிரிவிலுள்ள மாணவர்களின் கல்வி நிலையும் கேள்விக்குறியாகியுள்ளது.
தற்போது ஆரம்பப்பிரிவில் ஆசிரியர்கள் இல்லாத சில வகுப்புக்களை வேறு வகுப்புக்களுடன் இணைத்து கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதுடன் பல வருடகாலமாக இப்பாடசாலைக்கு ஆரம்ப பிரிவு மற்றும் மேற்பிரிவுகளுக்கு ஆசிரியர்கள் தேவைப்படும்போது அண்மையில் கூட சில ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டமை ஆரோக்கியமானதல்ல எனவும் தங்களின் பிள்ளைகளின் கல்வி நிலை பாரிய ஆபத்தை நோக்கிச்செல்வதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயமாக அக்கரைப்பற்று வலயக்கல்விப்பணிப்பாளரிடம் பெற்றோர்கள் நீண்டகாலமாக முறையிட்டு வரும் நிலையில் வலயக்கல்விப்பணிப்பாளர் ஆசிரியர்களை நியமித்து தருவதாக நீண்டகாலமாக போலி வாக்குறுதி வழங்கி வருவதாகவும் பெற்றோர்களும் பழைய மாணவர்களும் குறிப்பிடுகின்றனர். வலயக்கல்விப்பணிப்பாளரின் நடவடிக்கையில் ஏமாற்றமடைந்துவரும் இப்பிரதேச பெற்றோர்கள் பாதிக்கப்பட்டு வரும் தங்களது பிள்ளைகளின் ஆரம்பக் கல்விக்கு வலயக்கல்விப்பணிப்பாளரே பொறுப்புக்கூற வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.
எனவே இப்பாடசாலை மாணவர்களின் கல்வி நலன் கருதி பல வருடகாலமாக காணப்பட்டுவரும் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்ய தற்போது கிழக்குமாகாண பாடசாலைகளுக்கு நியமனம் செய்யப்படும் கல்விக்கல்லூரி ஆசிரியர்களை இப்பாடசாலையிலும் நியமனம் செய்வதற்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பெற்றோர்கள் வேண்டிக்கொள்வதோடு பாதிக்கப்பட்டுவரும் ஆரம்ப பிரிவு மாணவர்களின் கல்வியினை கருத்திற்கொண்டு கிழக்கு மாகாண கல்வியமைச்சர் தனது உடனடி கவனத்தினை செலுத்துமாறும் பெற்றோர்கள் வேண்டுகின்றனர். அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பின்தங்கிய கோணாவத்தை கிராமத்தில் அமைந்துள்ள இப்பாடசாலையின் அவல நிலையை பிரதேச அரசியல்வாதிகளும் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கிழக்கு மாகாண பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இல்லை என மாகாண கல்வி அதிகாரிகள் உறுதியாகக் கூறிவரும்; இன்றைய காலகட்டத்தில் இவ்வாறான பின்தங்கிய பாடசாலைகளில் ஆசிரியர்கள் குறைபாடுகள் நீண்டகா லமாக நிலவி வருவதனை குறிப்பிட்டுக்காட்டும் பெற்றோர்கள் இப்பாடசாலையையும் அதிகாரிகள் கவனத்திற்கொள்ளவில்லையோ என சந்தேகிக்கின்றனர்.
