எஸ்.அஷ்ரப்கான்-
”20 திருத்தத்துக்கு அமைச்சரவையில் அனுமதியளித்துவிட்டு பாராளுமன்றில் அதனை தோற்கடிப்போம், நீதிமன்றம் போவோம்” என்றெல்லாம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் துள்ளி குதிப்பது முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றும் அவரது வழமையான அரசியலாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் குற்றம் சுமத்தியுள்ளார்.
கல்முனையில் நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பு நேற்று (22) நடைபெற்றபோது அங்கு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது;
20ஆவது தேர்தல் திருத்தச்சட்டம் சிறுபான்மை மக்களை ஓரம் கட்ட வேண்டும் என்பதற்காகவே கொண்டு வரப்பட்டுள்ளது. சிறுபான்மை கட்சிகளை கூட வைத்துக்கொண்டே இத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டதானது பேரினவாதிகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். சிறுபான்மை கட்சித்தலைவர்களுக்கு கொடுப்பதை கொடுக்காவிட்டால் அவர்கள் அமைச்சரவையில் ஆமா போட்டுவிட்டு சமூகத்திடம் சென்று வீராப்பு பேசி ஏமாற்றுவார்கள் என்பதும் இத்தகைய சமூக துரோகிகளை வைத்துக்கொண்டே தமது பேரின நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற முடியும் என்பதை நன்றாக தெரிந்து வைத்துள்ளார்கள். முஸ்லிம் சமூகமும் இத்தகைய போலி அரசியல்வாதிகளால் எவ்வளவுதான் ஏமாற்றப்பட்டாலும் அதனை புரிய முடியாத உணர்ச்சி அரசியலுக்குள் கட்டுப்பட்டு அடங்கிப்போயுள்ளது.
20க்கு ஆதரவாக ஜனாதிபதியும் அவரது சுதந்திர கட்சியும் இருக்கும் போது, ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களும் இருப்பது தெரிந்தும் இதனை பாரளுமன்றில் தோற்கடிப்போம் என ஹக்கீம் கூறுவது மிகப்பெரிய நகைச்சுவையாகும். அத்துடன் பல பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்ட போது, பேருவலை எரிக்கப்பட்ட போது இவற்றுக்கெதிராக இவற்றுக்கெதிராக நீதி மன்றம் போகாத ஹக்கீம் கூறுவது மற்றுமொரு நகைச்சுவையாகும். உண்மையில் ஹக்கீம் 20 விடயத்தில் உறுதியானவராக இருந்திருந்தால் இது விடயத்தில் அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது அமைச்சரவையிலிருந்து வெளி நடப்பு செய்திருக்க வேண்டும். இதனை ஹக்கீம் கட்சியோ, ரிசாத் கட்சியோ செய்யாமல் ஜனாதிபதி முன்பாக நல்லவர்களாக காட்டிவிட்டு வெளியே வந்து வழக்கு போடுவோம் என்கிறார்கள். இவர்களின் பித்தலாட்டத்தை இன்னமும் இந்த சமூகம் புரிந்து கொள்ளவில்லை என்றால் உலகிலேயே ஏமாந்த சமூகமாக இலங்கை முஸ்லிம்களே வரலாற்றில் பதியப்படுவார்கள்.(ந)
