குஜராத் மாநிலம் கட்ச் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சோட் படேல். இவருக்கும் கட்ச் மாவட்டத்தைச் சேர்ந்த பன்ஜி என்பவருக்கும் 35 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அப்போது பன்ஜிக்கு 25 வயது.
திருமணமாகி நீண்ட நாட்களாகியும் ரஞ்சோட் – பன்ஜி தம்பதிக்கு குழந்தை பிறக்கவில்லை. குஜராத் மாநிலத்தில் உள்ள பிரபல டாக்டர்களை சந்தித்து சிகிச்சை பெற்ற பிறகும் அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை.
இதனால் அவர்கள் மும்பை வந்து டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றனர். அதற்கும் பலன் கிடைக்கவில்லை.
மருத்துவத்தில் நம்பிக்கை இழந்த ரஞ்சோட் – பன்ஜி இருவரும் குழந்தை வேண்டி கோவில், கோவிலாக ஏறி இறங்கினார்கள். எந்த ஜோதிடர் என்ன பரிகாரம் சொன்னாலும், குழந்தை மீது உள்ள அலாதி பிரியம் காரணமாக பணத்தை தண்ணீராக செலவு செய்து முடித்தனர்.
குஜராத்திலும், மராட்டியத்திலும் அவர்கள் கால்படாத கோவிலே இல்லை என்று சொல்லும் அளவுக்கு வழிபாடுகள் செய்தனர். ஆனால் அவர்களது வழிபாட்டுக்கும் பலன் கிடைக்கவில்லை. தொடர்ந்து ஏமாற்றமே மிஞ்சியது.
ஒரு கட்டத்தில் ரஞ்சோட் நம்பிக்கையை இழந்து விட்டார். ஆனால் பன்ஜி மட்டும் நம்பிக்கை இழக்கவில்லை. நவீன மருத்துவ முறையையும் பார்த்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தார்.
இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு மாதவிலக்கு ஏற்படுவது நிரந்தரமாக நின்று போனது. என்றாலும் பன்ஜி மனம் தளரவில்லை.
குழந்தை பெற்று தீர வேண்டும் என்பதில் உறுதியாகவும், ஆர்வமாகவும் இருந்தார். 60 வயது ஆன பிறகும் குழந்தை மீதான ஆசை கரையவில்லை.
பல டாக்டர்கள் சிகிச்சை அளித்து தோல்வி அடைந்த நிலையில் ஆமதாபாத்தைச் சேர்ந்த டாக்டர் மெகுல் தமனியை பன்ஜி நாடினார். பன்ஜியை பரிசோதித்த டாக்டர் மெகுல் கடந்த ஆண்டு சிகிச்சையைத் தொடங்கினார். ஐ.வி.எப். (கின்– விட்ரோ – பெர்டிலை சேசன்) முறையில் பன்ஜியை குழந்தை பெற வைக்க ஏற்பாடு செய்தார்.
இதற்காக பன்ஜியின் கணவர் 65 வயதாகும் ரஞ்சோட் படேலிடம் இருந்து உயிரணுக்கள் பெறப்பட்டன. பிறகு அவை கருவாக வளர்க்கப்பட்டு பன்ஜி உடலுக்குள் செலுத்தப்பட்டது. முதல் முயற்சியிலேயே வெற்றி கிடைத்தது.
கடந்த 9 மாதங்களாக தன் குழந்தையை பன்ஜி வயிற்றில் சுமந்தார். நேற்று முன்தினம் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு டாக்டர் மெகுல் மருத்துவம் பார்த்தார்.
பன்ஜிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. சுமார் 4 கிலோ எடையில் உள்ள அந்த குழந்தையை பார்த்ததும் பன்ஜி ஆனந்த கண்ணீர் வடித்தார். 60 வயதில் தனக்கு குழந்தை பிறந்தது அதிசயம் தான் என்று அவர் மகிழ்ச்சிப் பொங்க கூறினார்.(ந)
