றியாஸ் ஆதம்-
நிந்தவூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டியின் மெய்வல்லுநர் போட்டிகளும் பரிசளிப்பு நிகழ்வும் பிரதேச செயலாளர் ஜனாபா ஆர்.யூ அப்துல் ஜலீல் தலைமையில் நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.
அன்றைய தினம் நடைபெற்ற மெய்வல்லுநர் போட்டிகளின் முடிவின்படி லகான் விளையாட்டுக் கழகம் 99 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தினையும், மதீனா விளையாட்டுக் கழகம் 49 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தினையும், ரியல் இம்ரான் விளையாட்டுக் கழகம் 35 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டது.
நடைபெற்று முடிந்த இவ்விளையாட்டுப் போட்டியின் குழுச்சுற்றுப் போட்டி மற்றும் மெய்வல்லுநர் போட்டிகளின் மொத்தப் புள்ளிகளின் அடிப்படையில் லகான் விளையாட்டுக் கழகம் 37 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தினையும், மதீனா விளையாட்டுக் கழகம் 27 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தினையும், கென்ட் விளையாட்டுக் கழகம் 21 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டது. இதன்போது அதிகூடிய புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தினை தனதாக்கிக் கொண்ட லகான் விளையாட்டுக் கழகம் நிந்தவூர் பிரதேசத்தின் 2015 ஆம் ஆண்டிற்கான சம்பியனாகவும் தெரிவானது.
இந்நிகழ்வில் சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரீ ஹசன் அலி பிரதம அதிதியாகவும், பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசீம் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரீப் சம்சுதீன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், அம்பாரை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வீ.ஈஸ்வரன் விசேட அதிதியாகவும், அதிதிகளாக நிந்தவூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு சான்றுதழ்களையும் பரிசில்களையும் வழங்கி வைத்தனர்.
மேற்குறித்த நிந்தவூர் பிரதேச செயலக விளையாட்டுப் போட்டிகள் யாவும் விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல் தாஜூத்தீனின் நெறிப்படுத்தலின் மூலம் சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.





