முஹம்மது றினாஸ்-
புல்மோட்டை கல்வி அபிவிருத்தி மையத்தின் (EDC) ஏற்பாட்டில் கடந்த 2014ம் ஆண்டில் பல்கலைக் கழகத்திற்கு தெரிவான மாணவர்களையும் 2014 ல் நடைபெற்ற க. பொ.த ( சா.த)ப் பரீட்சையில் மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று புல்மோட்டை மண்ணுக்கு பெருமை சேர்த்த மாணவர்களையும் க.பொ.த.(உ.தரம்) கற்க தகுதி பெற்ற மாணவர்களையும் ஊர் தழுவிய ரீதியில் கௌரவிக்கும் மாபெரும் பாராட்டு விழா 30.04.2015 (வியாழக்கிழமை) பி.ப. 04:00 மணிக்கு கணிஜவெளி சிங்கள மஹா வித்தியாலய கேட்போர் கூட மண்டபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஜனாப். MTA. நிஸாம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்த இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் திட்டமிடல் பணிப்பாளர் ஜனாப். MAM. உனைஸ், கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் வர்த்தகத்துறைப் பணிப்பாளர் ஜனாப். MSM. ராசிக், புல்மோட்டை பொலிஸ் நிலைய இரண்டாம் நிலைப் பொறுப்பதிகாரி திரு. பொடி பண்டார, இலங்கை கனிய மணல் லிமிடெட் டின் இயந்திரவியல் பொறியி யலாளர் திரு. ராஜபக்ஸ மற்றும் பாடசாலை அதிபர்கள், பிரதி அதிபர்கள்,ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும்ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் ஒன்றிய உறுப்பினர்கள், தனியார் கல்வி நிலைய நிர்வாகிகள், இலங்கை கனிய மணல் லிமிடெட் டின் ஊழியர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், தாதிய அலுவலர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், விவசாய மத்திய நிலைய உத்தியோகத்தர்கள், பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை நிர்வாகிகள், மாணவர்கள், பெற்றார்கள் என, பெருந்திரளானோர் மிகவும் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர்.
புல்மோட்டையின் பாரம்பரிய கலை நிகழ்வான கோலாட்டத்துடன் அதிதிகள் வரவேற்கப்பட்டு ஆரம்பித்த பாராட்டு நிகழ்வு மாலை 07:00 மணிவரை நடைபெற்றது.
இதில் பல்கலைக் கழகத்திற்கு தெரிவான மற்றும் க. பொ.த ( சா.த)ப் பரீட்சையில் மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று புல்மோட்டை மண்ணுக்கு பெருமை சேர்த்த மாணவர்கள் பதக்கம், பரிசுப் பொருள்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். அத்துடன் க.பொ.த.(உ.தரம்) கற்க தகுதி பெற்ற ஏனைய மாணவர்கள் பரிசுப் பொருள்கள் வழங்கி கௌரவிக்கபட்டார்கள்.