அரசியலமைப்புச் சபைக்கு நியமிக்கப்படவுள்ள சிவில் சமூகத்தைச் சேர்ந்த மூவரின் பெயர்களை அங்கீகரிப்பதற்காக விசேட நாடாளுமன்ற அமர்வொன்றுக்கு அழைப்பு விட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான திகதி, சபாநாயகர் சமல் ராஜபக்ஷவினால் இன்று தீர்மானிக்கப்படும் என பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
அடுத்த நாடாளுமன்ற அமர்வை எதிர்வரும் ஜூன் மாதம் 9ஆம் திகதி நடத்த ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அவசர டவடிக்கைக்காக அத்தினத்துக்கு முன்னர் நாடாளுமன்ற அமர்வை நடத்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என பிரதி சபாநாயகர் மேலும் கூறினார்.
நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்துக்கமைய நியமிக்கப்படவுள்ள அரசியலமைப்புச் சபையில் 10 உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளதுடன் அதில் 7பேர் பாடாளுமன்ற உறுப்பினர்களாவர். ஏனைய மூவரும் சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர்.
இது தவிர, சபாநாயகர், பிரதமர் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரும் இந்த அரசியலமைப்புச் சபையில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, எம்.பிக்களான சம்பிக்க ரணவக்க, ஜோன் செனவிரத்ன, விஜயதாஸ ராஜபக்ஷ, இரா. சம்பந்தன் மற்றும் ராதிகா குமாரசுவாமி, ஏ.டப்ளியு இஸட் மற்றும் ஏ.ரி. ஆரியரத்ன ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன./ச/
