இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவரை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்பளித்துள்ளார். இவர் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்து முக்கிய பேச்சு நடத்தவுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரிக்கும் இடையிலான இந்த முக்கிய சந்திப்பு நாளை காலை 9.30 மணிக்கு கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.
1972 ஆம் ஆண்டு அமெரிக்க இராஜாங்கச் செயலராக இருந்த வில்லியம் பியேர்ஸ் ரோஜர் மேற்கொண்ட பயணத்துக்குப் பின்னர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை வரும் முதலாவது அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி ஆவார்.
ஜோன் கெரி, இன்று முழுநாளும் பல்வேறு முக்கிய சந்திப்புகளை நடத்தவுள்ளார். அத்துடன், சில முக்கிய நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவுள்ளார்.
இவர் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு சந்திக்கவுள்ளார். அதன் பின்னர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேசவுள்ளார்.
அதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜோன் கெரிக்கும் இடையிலான சந்திப்பு இன்று நண்பகல் 12.30 மணியளவில் அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது. பிற்பகல் 1.45 மணியளவில் களனி ரஜமகா விகாரைக்கு விஜயம் செய்யவுள்ள ஜோன் கெரி, அங்கு வெசாக் பந்தலைத் திறந்துவைக்கவுள்ளார்.
மாலை 5 மணியளவில் கொழும்பு, தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெறும் நிகழ்வில் அமெரிக்காவின் கொள்கை தொடர்பிலும் இவர் விசேட உரையாற்றவுள்ளார்.
இதனையடுத்து தாஜ் சமுத்திரா ஹோட்டலில் மாலை 6.20 மணியளவில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றையும் நடத்தவுள்ளார். நாளை ஞாயிற்றுக்கிழமை காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்துப் பேசியதுமே ஜோன் கெரி நாடு திரும்புவார்.ச
