அஸ்லம் எஸ்.மௌலானா-
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் சிறுபான்மையினரை பிரதிபலிக்கும் பகுதிகள் அகற்றப்பட்டு- தனியொரு இனத்தை மாத்திரம் முன்னிலைப்படுத்தும் வகையிலான தேசியக் கொடிகளை சில எம்.பி.க்கள் ஏந்திய சம்பவத்திற்கு கல்முனை மாநகர சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு நேற்று முன்தினம் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்ற போதே இக்கண்டனத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதற்கான பிரேரணையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.ஆர்.அமீர் முன்மொழிந்து உரையாற்றுகையில்;
"தேசியக்கொடியை மாற்றியமைத்தல் நாட்டின் இறைமையை பாதிக்கும் செயல் மட்டுமன்றி சிறுபான்மையினருக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியாகும். பொறுப்பு வாய்ந்தவர்களே இக்கொடியை ஏந்தியிருந்தமை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
நாட்டில் திட்டமிட்டவாறு சிறுபான்மை சமூகங்களான தமிழ், முஸ்லிம் மக்களை ஓரங் கட்டும் நடவடிக்கைகள் சில சக்திகளால் முன்னெடுக்கப்பட்டு வருவதன் ஓர் வெளிப்பாடே தேசியக்கொடி மாற்ற விவகாரமாகும். இந்த விடயம் சிறுபான்மைச் சமூகங்களின் அந்தஸ்து மற்றும் இருப்பை பாதித்துள்ளது.
நாகரிகமற்ற மூர்க்கத்தனமான இச்செயற்பாட்டை மேற்கொண்டவர்களுக்கு எதிராக காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென இந்த சபை அரசாங்கத்தை கோர வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.
பிரதி முதல்வர் ஏ.எல். அப்துல் மஜீத் உரையாற்றுகையில்;
“ஒரே தேசம் ஒரே நாடு ஒரே மக்கள் என்ற மாயையை முன்வைத்தவர்களின் சிறுபான்மை சமூகங்களுக்கெதிரான சதி முயற்சியே தேசியக்கொடி மாற்ற விடயமாகும். பௌத்த பேரினவாத சிங்கள அடிப்படைவாதிகள் அதன் பின்னணியிலுள்ளனர்.
இன்றைய நல்லாட்சியை முன்னெடுக்கும் அரசைப் பலவீனப்படுத்தும் உள் நோக்கத்துடனேயே இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஒன்பது வருட மஹிந்த ஆட்சியில் சிறுபான்மைச் சமூகங்கள் உரிமைகள் இழந்து அரக்க ஆட்சியினால் நசுக்கப்பட்டு துயருற்றிருந்த நிலையில் தொடராக மீண்டும் சிறுபான்மைச் சமூகங்களை காலில் போட்டு மிதிப்பதற்கு பௌத்த பேரினவாதமும் பிற்போக்கு சக்திகளும் முயற்சித்து வருகின்றன" என்றார்.
இப்பிரேரணை மீது மற்றும் சில உறுப்பினர்களும் ஆக்ரோசமாக உரையாற்றினர்.
முதல்வர் நிஸாம் காரியப்பர் பிரேரணையை நிறைவு செய்து உரையாற்றுகையில்;
"அரசியலமைப்பின் ஆறாவது சரத்து தேசியக் கொடி தொடர்பாக மிகத்தெளிவாகக் குறிப்பிடுகின்றது. எனவே தேசியக் கொடியை வேறு விதமாக பயன்படுத்துவதோ அதில் மாற்றங்கள் செய்வதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.
இந்த நாட்டில் சிறுபான்மையினங்களான தமிழர்களும் முஸ்லிம்களும் நாட்டின் பங்காளிகள் அல்லவென காட்டும் நோக்கிலேயே மாற்றப்பட்ட தேசியக்கொடி ஏந்தப்பட்டுள்ளது.
பெரும்பாலும் இது தொடர்பான விசாரணையின் பின்னர் சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுக்கப்படுமென எதிர்பார்க்கலாம்” என்று குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து கண்டனத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதுடன், தீர்மானத்தின் பிரதிகளை பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபர் ஆகியோருக்கு அனுப்பி வைக்குமாறு சபை செயலாளருக்கு முதல்வர் உத்தரவிட்டார்.(ந)
.jpg)
.jpg)