பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஐக்கிய தேசியக் கட்சியை ஏமாற்ற முடிந்தாலும் தம்மை ஏமாற்ற முடியாது என மின்வலு எரிசக்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
19வது திருத்தச் சட்டம் 72ம் அரசியல் யாப்புத் திருத்தத்தின் பிரதி என்றும் மக்கள் வாக்கு பலத்தில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ஒருவர் பெயரளவு நிறைவேற்று ஜனாதிபதியாக இருக்க முடியாது எனவும் சம்பிக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (06) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
யாப்பு திருத்தத்தை முன்வைத்த பின் அதற்கு தாம் எதிர்ப்பு தெரிவித்ததால் முதல் நான்கு பக்கங்களை மாத்திரம் திருத்தி வர்த்தமானியில் வெளியிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தமக்கு காட்டிய யாப்புத் திருத்த பிரதியும் நீதிமன்றுக்கு சமர்பித்த யாப்புத் திருத்தப் பிரதியும் மாறுபட்டது என அவர் கூறியுள்ளார்.
மாலை 4 மணிக்கு யாப்புத் திருத்தம் கொண்டுவந்து அதனை 12 மணிக்கு வர்த்தமானியில் வெளியிட அனுமதிக்க முடியாது என சம்பிக்க குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையில் உள்ள 8 அம்சங்கள் நீக்கப்பட வேண்டும் என்று தாம் வலியுறுத்தியதாகவும் ஆனால் நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு பதிலாக நிறைவேற்று பிரதமர் முறையை கொண்டுவர அனுமதி இல்லை என்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
1995ம் ஆண்டு ஐதேகவிற்கு ரணில் செய்த செயலால் 20 வருடங்கள் அக்கட்சி தோல்வியை தழுவியதாகவும் அந்த திட்டத்தை நாட்டுக்கு செய்ய முடியாது என்றும் சம்பிக்க கூறினார்.
யாப்புத் திருத்தத்துடன் சேர்த்து தேர்தல் சட்டத் திருத்தமும் செய்யப்பட வேண்டும் என்றும் தொகுதிவாரி முறை குறித்து தேர்தல்கள் ஆணையாளர் வைத்துள்ள யோசனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
