இந்திய சினிமா பிரபலங்களான ருத்திக் ரோஷன் மற்றும் அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் ஐ.பி.எல். தொடக்க விழாவில் நடனமாடி ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கிறார்கள்.
8-ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வருகிற 8-ஆந் தேதி தொடங்குகிறது.
தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சும் மும்பை இந்தியன்சும் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் சந்திக்கின்றன.
போட்டிக்கு ஒரு நாளுக்கு முன்பாக அதாவது 7-ந் தேதி கொல்கத்தா சால்ட்லேக் மைதானத்தில் பிரமாண்டமான தொடக்க விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இரவு 7.30 மணிக்கு ஆரம்பிக்கும் தொடக்க விழாவில் பிரபலங்களின் கண்கவர் நடனம், கலை நிகழ்ச்சி மற்றும் லேசர் ஒளி வெள்ளத்தில் இசை விருந்து என்று மொத்தம் 2 மணி நேரம் நடைபெறும். சோனி சிக்ஸ் மற்றும் சோனி மேக்ஸ் சேனல்கள் இதை நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. இந்த நிலையில் தொடக்க விழாவில் அசத்தப்போகும் கலைஞர்கள் யார்?-யார்? என்ற விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தி நடிகையும் கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் காதலியுமான அனுஷ்கா சர்மா இந்தி நட்சத்திரங்கள் ருத்திக் ரோஷன், சாகித் கபூர் மற்றும் பர்ஹான் அக்தர் ஆகியோரின் நடனத்துடன் இசை அமைப்பாளர் பிரித்தமும் கைகோர்க்கிறார். இந்தி நடிகர் சயீப் அலி கான் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.
தொடக்க விழாவின் முக்கிய அம்சமாக 8 அணிகளின் கேப்டன்களும் மேடையில் தோன்றுவார்கள். விளையாட்டின் உத்வேகத்தை கடைபிடிக்கும் உறுதிமொழியையும் வழக்கம் போல் எடுத்துக் கொண்டு கையெழுத்திடுவார்கள். 8-வது ஐ.பி.எல். சீசன் தொடங்குகிறது என்பதை குறிக்கும் வகையில் நடப்பு சாம்பின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் கவுதம் கம்பீர் கோப்பையை விழா மேடையில் வைப்பார்.
மேற்கண்ட தகவல்களை தெரிவித்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் அனுராக் தாகூர் விழா தொடங்குவதற்கு 2½ மணி நேரத்திற்கு முன்பாக ரசிகர்கள் ஸ்டேடியத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். தொடக்க விழாவிற்கான டிக்கெட்டுகளை ஐ.பி.எல். அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரூ.200 முதல் பெற்றுக் கொள்ளலாம் அல்லது காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை ஸ்டேடியத்தில் வாங்கிக் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டார்.
