றியாஸ் ஆதம்-
சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டியின் மெய்வல்லுநர் போட்டிகளும், பரிசளிப்பு நிகழ்வும் (19.04.2015) ஞாயிற்றுக் கிழமை பிரதேச செயலாளர் ஏ. மன்சூர் தலைமையில் சம்மாந்துறை தாறுஸ் ஸலாம் மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
அன்றைய தினம் நடைபெற்ற மெய்வல்லுநர் போட்டிகளின் முடிவுகளின்படி றோயல் மெட்ரிக் விளையாட்டுக் கழகம் 95 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தினையும், ஏசியன் விளையாட்டுக் கழகம் 59 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தினையும், சென்னை வாரியஸ் மற்றும் முபோ ஆகிய விளையாட்டுக் கழகங்கள் தலா 37 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டது.
இவ்விளையாட்டுப் போட்டியின் நடைபெற்று முடிந்த குழுப் போட்டிகளின்படி கிரிக்கட் சுற்றுப்போட்டியில் நியு சன் விளையாட்டுக் கழகம் முதலாமிடத்தினையும், யுனிட்டி விளையாட்டுக் கழகம் இரண்டாமிடத்தினையும், கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் ஏசியன் விளையாட்டுக் கழகம் முதலாமிடத்தினையும், சிமாட் விளையாட்டுக் கழகம் இரண்டாமிடத்தினையும், எல்லே சுற்றுப்போட்டியில் யுனிட்டி விளையாட்டுக் கழகம் முதலாமிடத்தினையும், சென்னல் வொரியஸ் விளையாட்டுக் கழகம் இரண்டாமிடத்தினையும், கபடி சுற்றுப்போட்டியில் ஏசியன் விளையாட்டு கழகம் முதலாமிடத்தினையும், சிமாட் விளையாட்டுக் கழகம் இரண்டாமிடத்தினையும், உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் ஏசியன் விளையாட்டுக் கழகம் முதலாமிடத்தினையும், றோயல் மெட்ரிக் விளையாட்டுக் கழகம் இரண்டாமிடத்தினையும் பெற்றுக்கொண்டது.
இவ்விளையாட்டுப் போட்டியின் இறுதி முடிவுகளின்படி ஏசியன் விளையாட்டுக் கழகம் 37 மொத்தப் புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தினைப் பெற்று இவ்வாண்டுக்கான சம்பியனாகவும், றோயல் மெட்ரிக் மற்றும் யுனிட்டி ஆகிய விளையாட்டுக் கழகங்கள் தலா 17 மொத்தப் புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தினையும் பெற்றுக்கொண்டது.
இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.ஐ அமீர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.