அஷ்ரப் ஏ சமத்-
வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சின் வேலைத்திட்டத்தின் கீழ் ஏப்ரல் மாதம் 09ஆம் திகதி 'திரிய சவிய' மற்றும் நாடு முழுவதும் 50 ஆயிரம் வீடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் வீடமைப்புக் கடன் வழங்கும் நிகழ்வுகள் பொலநருவையில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களின் பங்குபற்றுதலோடு இந் நிகழ்வுகள் நடைபெறுகின்றது.
முதலாவது நிகழ்வு ஏப்ரல் 09ஆம் தகிதி பொலநருவை புத்தி மண்டபத்தில் மு.பகல் 09.00 மணிக்கு 'திரிசவிய' சுயதொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்குதல்.
பிற்பகல் 02.00 மணிக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் வீடுகள் அமைப்பதற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் 1 இலட்சம் ருபா வீடமைப்புக் கடன் வழங்கும் நிகழ்வு ஹிங்குராகொடை ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் மென்சிரிபாய மண்டபத்தில் நடைபெறும்.
இதேவேளை இந்த நாட்டில் வாழும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 14 இலட்சம் மக்களது வாழ்வாதாரத்தினை முன்னேற்றும் நோக்கோடு சமுர்த்தி கொடுப்பணவுகள் 200 வீதமாக அதிகரிப்பதற்காக அமைச்சர் சஜித் பிரேமதாசாவினால் முன்னெடுக்கப்பட்டது.
இக் கொடுப்பணவுத்திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் தேசிய வைபவம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி பொலநருவையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந் நிகழவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க, மற்றும் அமைச்சர்களும் கலந்து கொள்ள உள்ளதாக வீடமைப்பு சமுர்த்தி அமைச்சரின் ஊடகச் செயலாளர் மகிலால் செனவிரத்தின தெரிவித்தார்.
இந் நிகழ்வுகளில் வீடமைப்பு சமுர்த்தி இராஜங்க அமைச்சர் திலான் பெரேரா, பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ் அமீர் அலி மற்றும் பொலநருவை மாவட்ட மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொள்வார்கள்.
