ஜுனைட்.எம்.பஹ்த்-
உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம் (World Book and Copyright Day) அல்லது உலக புத்தக நாள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகிறது.
உலக புத்தக நாள் என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனத்தினால் (யுனெஸ்கோ - UNESCO) அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு நாளாகும்.
இது 1995 ஆம் ஆண்டு முதன் முதலாகக் கொண்டாடப்பட்டது.
பாரிஸ் நகரில் 1995 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி முதல் நவம்பர் 16 ஆம் திகதி வரை நடந்த யுனெஸ்கோவின் 28 ஆவது மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படது.
அத்தீர்மானம் யாதெனில் "அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 ஆம் திகதி உலக புத்தக தினமாக கொண்டாடப்படும்".
ஷேக்ஸ்பியர், செர்வாண்டிஸ் போன்ற புகழ்பெற்ற இலக்கியவாதிகள் ஏப்ரல் 23-ஆம் திகதி மறைந்தனர்.
இலக்கியத்தில் நீங்கா இடம்பெற்றுள்ள இவர்களின் பங்களிப்பை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ம் திகதியை உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினமாக யுனஸ்கோ அறிவித்தது.
அதன்படி கடந்த 1995-ஆம் ஆண்டு முதல் உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
100க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த தினத்தை கொண்டாடுகின்றன.
யுனெஸ்கோவுடன் இணைந்து அனைத்துலக நூலக சங்கங்கள் மற்றும் அனைத்துலக பதிப்பாளர் சங்கங்களும் இந்நாளை அனுஷ்டித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
