த.நவோஜ்-
மட்டக்களப்பு கல்வி வலயத்தில் உயர்தர மாணவர்களுக்கான இணைந்த கணித பாட பரீட்சை வினாத்தாளில் இடம்பெற்ற குழறுபடிகளுக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் பொறுப்புக் கூற வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் முன்வைத்துள்ளது.
மட்டக்களப்பு கல்வி வலயத்தில் நடைபெற்ற பரீட்சைக் குழறுபடிகளைக் கண்டித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை செயலாளர் பொ.உதயரூபன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
'மட்டக்களப்பு கல்வி வலயத்தினால் நடாத்தப்பட்ட உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான இணைந்த கணித பரீட்சை வினாத்தாளில் பல்வேறான குழறுபடிகளும், பரீட்சை வினாத்தாள் பண்புசார் தரத்தைக் கொண்டு காணப்படவில்லை. இதனால் மாணவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கடும் மன உளச்சலுக்காளாகியுள்ளனர்.
மட்டக்களப்பு கல்வி வலயத்தில் விஞ்ஞான வள நிலையமொன்று உள்ளது பௌதீக விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியர் நியமிப்பு செய்யப்பட்டிருந்தும் தொடர்ச்சியாக உயர்தர பரீட்சை வினாத்தாள்களில் குழறுபடிகள் நடைபெறுவதாக எமது சங்கம் சுட்டிக்காட்டியிருந்தும் வலயக் கல்விப் பணிப்பாளரின் பதில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) அசமந்தப் போக்கின் காரணமாக மேற்படி குழறுபடிகள் நடைபெறுகிறது.
கல்வி வலயத்தின் பதில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான திட்டமிடல், கல்வி அபிவிருத்தி மற்றும் வள நிலையப் பொறுப்பாளர் ஆகியோர் பொளதீக விஞ்ஞான பட்டிதாரிகளாக இருந்தும் மேற்படி பரீட்சை வினாத்தாள் குழறுபடியாக நடைபெற்றுள்ளமை வலயத்தின் நிர்வாக வினைத்திறனற்ற செயற்பாட்டையே காட்டுகிறது.
இவ்விடயம் தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளர் பொறுப்புக்கூற வேண்டும், பதில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) தொடர்பு கொண்ட போது பொறுப்பற்ற விதத்தில் வகை கூறியமை வினைத்திறனற்ற நிருவாக செயற்பாட்டைக் காட்டுகிறது.
இவ்வருடம் நடைபெறவிருக்கும் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பல மாணவர்கள் பொறுப்பற்ற வினாத்தாள் குழறுபடியினால் பாதிப்படைந்துள்ளனர். மட்டக்களப்பு கல்வி வலயம் தேசிய மட்டத்தில் பின்நோக்கி சென்றுள்ளதுடன், கடந்த வருடம் திறமை அடிப்படையில் பல்கலைக் கழக தெரிவு வலயத்தில் பின்நோக்கித் தள்ளப்பட்டுள்ளது.
கல்வி அபிவிருத்திக்கான பதில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் இரண்டாம் தர கல்வி 'கணித பாட' பிரபல ரீயூசன் மாஸ்டராக இருப்பதினால் உயர்தரம் தொடர்பாக போதியளவு ஆர்வம் காட்டுவதில்லை.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சு, மாகாண கல்விப் பணிப்பாளர் பரீட்சைக் குழறுபடிகள் தொடர்பாக சட்டவாட்சியினை மேலான கவனத்தில் கொண்டு வகை சொல்லல் வேண்டும்' என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.