தர்ஜுமிலாத்-
பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் அத்தியவசியத் தேவையாக இருந்து வந்த இரத்த வங்கியானது 2015.02.24 ஆம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் இராஜாங்க சுகாதார அமைச்சருமான கௌரவ எம்.ரீ.ஹசன் அலி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய பொத்துவில் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் அவர்கள் பொத்துவில் பிரதேசத்தின் கல்வி, சுகாதார, போக்குவரத்து, நீர்பாசனம் மற்றும் ஏனைய அத்தியவசிய அபிவிருத்தி தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களுக்கு போதுமான அதிகாரம் இன்மையினால் அவற்றினை கடந்த அரசாங்க ஆட்சியில் செயற்படுத்த முடியாமல் இருந்தது.
ஆனால் தற்போதைய சூழ்நிலையில் எமது கட்சிக்கு போதிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதனைக் கொண்டு குறித்த அபிவிருத்தித் தேவைகள் நிறைவேற்றப்படாமல் ஏமாற்றப்படுமாவிருந்தால், பொத்துவில் மக்கள் எதிர்காலத் தேர்தல் தொடர்பில் எடுக்கும் முடிவுகள் கட்சிக்குப் பாதகமாக அமைவதை யாராலும் தடுக்க முடியாது.
எனவே குறித்த குறைபாடுகளை அவசரமாக தீர்த்துவைக்க கட்சியும் அமைச்சர்களும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், இரத்த வங்கியை அமைக்க நிதி ஒதுக்கிய முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் கௌரவ எம்.ஐ.மன்சூர் அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்தார்.