பாராளுமன்றத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அத்துடன், தேர்தலின் பின்னர் கூட்டணி அமைப்பது தொடர்பில் தீர்மானிக்கவுள்ளதாகவும் அவர் கொழும்பு ஊடகமொன்றிடம் இன்று புதன்கிழமை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் 98,800க்கும் அதிகமான மக்கள் வாக்களித்து தனக்கு அங்கீகாரம் வழங்கியிருந்ததாகவும், அந்த சந்தர்ப்பத்தில் நாட்டில் ஆட்சியிலிருந்த ஊழல்மிகு அரசாங்கம் தனது வாக்குகளை திருடியதாகவும் சரத் பொன்சேகா குற்றஞ்சாட்டியுள்ளார்.
மக்கள் தற்போது தனக்கு வழங்கி வருகின்ற ஆதரவை அவதானிக்கையில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் இரட்டிப்பான வாக்குகளை பெற்று வெற்றியீட்ட முடியும் என்ற நம்பிக்கை தனக்கிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.