த.நவோஜ்-
மட்டக்களப்பு மாவட்டத்தில் சனிக்கிழமை அதிகாலை முதல் பெய்து வரும் அடை மழை காரணமாக கல்குடா தொகுதியின் பல பகுதியின் நீரில் மூழ்கியுள்ளதுடன், ஓட்டமாவடி, வாழைச்சேனை, பேத்தாழை மற்றும் வாகரை, பனிச்சங்கேணி, சந்தமணமடு ஆற்றின் நீரின் மட்டம் உயர்வதனால் மேற்குக் கரையிலுள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கிக் காணப்படுகின்றது.
தொடர் மழை காரணமாக காவத்தமுனை, பிறைந்துறைச்சேனை, மாஞ்சோலைக் பகுதி, வாழைச்சேனை, கருணைபுரம், பேத்தாழை, விநாயகபுரம், யூனியன்கொலணி, புதுக்குடியிருப்பு, கல்குடா, பட்டியடிச்சேனை, கல்மடு, மருநதகர், நாசீவந்தீவு, கறுவாக்கேணி, கொண்டயன்கேணி, சுங்கான்கேணி, மீறாவோடை, ஓட்டமாவடி, வாகனேரி, கிரான், இலுக்கு பெருமாவெளி, ஈரளக்குளம், பெரியவட்டவான், சித்தாண்டி, வந்தாறுமூலை, சந்திவெளி, காயான்கேணி, வாகரை, கதிரவெளி, புச்சாக்கேணி, கண்டலடி உட்பட்ட பல பிரதேசங்களின் நீரில் மூழ்கிக் காணப்படுகின்றது.
அத்தோடு வீடுகளுக்குள் நீர் நிரம்பியுள்ளதுடன், பாரிய வெள்ளப் பெருக்கு அபாயமுள்ளது. மேலும் இப்பிரதேசங்கள் முற்று முழுதாக நீரில் மூழ்கியமையால் மக்களின் இயல்பு வாழ்;க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஓட்டமாவடி பகுதியில் பாதைகளைத் தோண்டி தண்ணீரை ஓட்டம் காட்டுவதற்கு பிரதேச இளைஞர் கழகங்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் செயற்படுவதுடன், வாழைச்சேனை பிரதேச சபைக்கு அழுத்தம் கொடுத்துள்ளது.
ஓட்டமாவடி, ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை, வாகரை போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள கிராமங்களிலுள்ள பல வீதிகள் மற்றும் பாடசாலைகள், வீடுகள், ஆலயங்கள், வியாபார நிலையங்கள், அரச அலுவலங்கள், வாழைச்சேனை பேச்சியம்மன் ஆலயம், புனித திரேசாள் ஆலயம் மற்றும் பல இடங்கள் நீரில் மூழ்கி காணப்படுகின்றது.
மேலும் வீட்டுக்குள் நீர் சென்றுள்ளமையால் பலரின் உடைகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், சிலர் தங்களுடைய உறவினர்கள் வீடுகளின் மற்றும் இடைத்தங்கல் முகாம்களின் தஞ்சமடைந்து வாழ்கின்றனர்.
இவ்வெள்ளத்தின் காரணமாக பல வீதிகள் நீரில் மூழ்கிக் காணப்படுவதுடன், வீதி ஓரங்களின் அமைக்கப்பட்ட வடிகான்களினால் நீர் செல்லும் வீதம் குறைவாகவே காணப்படுவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் கதிரவெளி, இறாலோடை, திக்கான, தட்டுமுனை, புணாணை போன்ற கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்து வருவதாகவும், இதே மழை தொடரும் பட்சத்தில் இடைத்தங்கல் முகாம்கள் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவுகளின் ஆரம்பிக்கப்படுமென்றும் வாகரைப் பிரதேச செயலாளர் செல்வி.எஸ்.ஆர்.இராகுலநாயகி தெரிவித்தார்.
இதேபோன்று மழை தொடரும் பட்சத்தில் ஓட்டமாவடி, ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மக்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள் தெரிவித்தனர்.