தாஜகான்-
தனிமனித தலைமைகளுடன் மக்கள் இல்லை. அவர்கள் தேசிய ஐக்கிய கூட்டமைப்பின் பொது வேட்பாளருடன் எஞ்சியோரையும் அணிதிரளுமாறு அழைப்பு. ஜக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் எம். அப்துல் மஜித்.
நாட்டில் தேசிய மட்டத் தேர்தல் ஒன்று நெருங்கி வருகின்றது. இத்தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது பற்றி மக்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். அதற்கு கட்சித் தலைமைகள் உரிய காலத்தில் சரியான வழிகாட்டாமையினால், அந்த தனிமனித தலைமைகளுடன் மக்கள் இன்று இல்லை. சுயமாகச் சிந்திக்கத் தொடங்கியுள்ள மக்கள் தாம் வாக்களிக்கவேண்டிய கட்சி தொடர்பில் முடிவெடுத்து விட்டார்கள்.
தற்போது அவர்கள் தேசிய ஐக்கிய கூட்டமைப்புடனும், அதன் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடனும் கைகோர்த்துள்ளனர். இந்த தேசிய மட்டத் தேர்தலுக்கு எதிரணி வேட்பாளராக பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தியுள்ள தேசிய ஐக்கிய கூட்டமைப்பில் எஞ்சியோரையும் அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கின்றேன். என்று கூறினார் எம்.அப்துல் மஜித் பொது வேட்பாளர் தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை பற்றியும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளமை பற்றியும் இன்று 2014.12.08 கருத்துத் தெரிவித்தபோதே, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாகாண பாதுகாப்பு இணைப்பதிகாரியுமான ஓய்வு பெற்ற சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மீராசாகிபு அப்துல் மஜீத் மேற்கண்ட அழைப்பை விடுத்தார்.
முஸ்லிம்களின் தானைத்தலைமை இன்றும் தாமே என்று மார்தட்டிக் கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் இன்று எதிரணியின் முன் மூக்குடைபட்டு, ஆட்சியாளர் முன் முழுந்தாளிட்டு, திக்குத் தெரியாது மக்கள் முன் மௌனித்து நின்கின்றது. அதன் செயலாளர் நாயகமோ, மு.கா இனிமேல் ஒருபோதும் சரணாகதி அரசியலைச் செய்யாது.
அரசிடமிருந்து வாக்குறுதிக் கலாசாரத்தை நம்புவதற்கும் நாம் தயாராக இல்லை என்கிறார். மக்கள் காங்கிரஸ் தலைமை, வடபகுதி முஸ்லிம்களின் 1990 இடம்பெயர்வில் குளிர்காய்ந்து, மட்டக்களப்பிலும், வன்னியிலும் மக்களைப் பலிக்கடாக்களாக்கி, பதவி அரசியலில் பரிணமித்து, இன்று உரிமைகளுக்காக தனித்தியங்குவதாக பம்மாத்து காட்டுகிறது. செயலாளர் நாயகமோ, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், ஜனாதிபதியுடன் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளப்படவுமில்லை. எந்தத்தரப்பை ஆதரிப்பது என்று தீர்மானிக்கப்படவுமில்லை என்கிறார்.
தேசிய காங்கிரஸ் தலைமைக்கு எந்தக் கவலையும் இல்லை. அம்பாறை மாவட்டத்தில் தான் பாராளுமன்றம் செல்லத் தேவையான 25 ஆயிரம் வாக்குகள், கிழக்கு மாகாண சபைக்கு மூன்று உறுப்பினர்கள், அக்கரைபற்று மாநகர சபையில் தன் மகன் மேயர், இதுபோக அவருக்கு வேறு என்ன கவலை இருக்கப்போகிறது. அளுத்கம எரிந்தாலென்ன?, கரையோர மாவட்டம் நமக்கெதற்கு?, வட்டமடு காணிகள் வந்தாலென்ன போனாலென்ன?, தானும் தனது அமைச்சுப் பதவியும் என்றிருக்கும் தலைமை, இத்தனைக்குமான நன்றிக்கடனாக முஸ்லிம்கள் மஹிந்தவுக்கு வாக்களித்து தமது நன்றியுணர்வை வெளிக்காட்ட வேண்டும் எனவும் கோரி நிற்கின்றது. மஹிந்த ராஜபக்ஸ உயிரோடு இருக்கும் வரைக்கும் முஸ்லிம்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டியதும், அவரை மஹிந்தவை விசுவாசிப்பதும் முஸ்லிம்களின் கடமை என்கிறார்.
எது எவ்வாறிருப்பினும், அவர் எம் ஊரவர் என்றவகையில், மக்களுக்கு தன்னாலானதை செய்துள்ளார்.கடற்படை, காலால் படை, வான்படை, நான் உள்ளிட்ட காவல்துறை, சிவில் பாது காப்புத்துறை, இவை அனைத்தினது புலனாய்வுத்துறையின் உதவியுடனும், குறிப்பாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவினதும் ஒத்துழைப்புடனேயே யுத்தம் வெற்றிகொள்ளப்பட்டது. அப்போது 2009.05.19இல் பதில்பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன என்பதையும் மறந்துவிடலாகாது.
ஆனால், புலிப்பயங்கரவாதத்தை பூண்டோடு ஒழித்துக்கட்டி, 30 வருடகால கொடிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது தாமேயென மார்தட்டிக் கொண்டிருக்கும் மஹிந்தவால், தம்முடனேயே கூட இருந்த மைத்திரி, ரஜீவ, ராஜித, வசந்த, துமிந்த, ஹூனைஸ், குணவர்த்தன, அர்ஜூண போன்றோர் இவ்வளவு விரைவாக காலை வாரிவிடுவார்கள் என்பதை மட்டும் அறிந்து கொள்ள முடியவில்லை. அவரது புலனாய்வுத்துறையாலும் அறியமுடியவில்லை. தனது கட்சியின் செயலாளர் நாயகமே எதிரணியின் பொது வேட்பாளர் ஆவார் என்பதைக்கூட அறிவிக்கும் வரை அறிந்திருக்கவில்லை.
காலத்துக்குக்காலம் கொள்கையை மாற்றுவதுபோல், நேரத்துக்கு நேரம் வார்த்தை களை மாற்றுவதுபோல், மேடைக்குமேடை பேச்சுக்களை மாற்றுவதுபோல்,சீருடையை மாற்றிவிட்டால் சிவில் நிர்வாகம் வந்துவிடுமா?. ஆயுளில் பெரும்பகுதியில் அதிகார ஆட்சி செய்த இராணுவ அதிகாரிகளால், எவ்வாறு ஓய்வு பெற்று மறுநாள் பெற்ற சிவில் நிர்வாகத்தின் சிறந்த நிர்வாகியாக முடியும். சிவில் நிர்வாகியாக கால அவகாசம் தேவையல்லவா?. வடக்கு, கிழக்கில் இன்று நடப்பது என்ன?. சீருடை மாத்திரமே மாறியுள்ளது.
சிவில் நிர்வாகம் வரவில்லை. மாற்றத்திற்காகவே மக்கள் எதிரணி பொது வேட்பாளரின் தேசிய ஜக்கிய கூட்டமைப்புடன் கைகோத்துள்ளனர். அணிதிரண்டு வருகின்றனர் என்றார்.

0 comments :
Post a Comment